என் மகள் சாவுக்கு நீதி கிடைக்கனும்! கடைசி வரைக்கும் போராடுவேன்.. உறுதியாய் பேசிய ரிதன்யாவின் தந்தை
திருப்பூர்: வரதட்சணை கொடுமை காரணமாக திருப்பூரைச் சேர்ந்த ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் ரிதன்யாவின் கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி மற்றும் மாமியார் சித்ரா தேவி ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தனது மகள் ரிதன்யாவின் தற்கொலைக்கு நீதி கிடைக்கும் வரை சட்டப் போராட்டத்தை தொடருவேன் என ரிதன்யாவின் தந்தை உறுதிபட தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அண்ணா துரையின் மகள் ரிதன்யாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஈஸ்வர மூர்த்தியின் மகன் கவின் குமார் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது.
திருமணம் ஆகி 78 நாட்களில் தனது கணவர் மாமனார் மற்றும் மாமியார் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமைப்படுத்துவதாக தனது தந்தைக்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ மெசேஜ் அனுப்பி விட்டு புது மணப் பெண் ரிதன்யா கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

ரிதன்யா தற்கொலை
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் ரிதன்யாவின் கணவர் கவின்குமார் மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகியோரை சேயூர் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கவின் குமார் தரப்பில் திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஜமீன் கோரி மனு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் கவின்குமார் அவரது தந்தை மற்றும் தாய் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என ரித்தன்யாவின் பெற்றோர் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு அவர்களுக்கு ஜாமீன் தர மறுத்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
வரதட்சணை கொடுமை
தொடர்ந்து கவின் குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்யப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் மற்றும் கோட்டாட்சியர் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் கோட்டாட்சியரின் விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தந்தை பேட்டி
இது குறித்து ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்," ரிதன்யாவின் கணவர் மாமனார் மற்றும் மாமியாருக்கு ஜாமீன் இருப்பது வருத்தம் அளிக்கிறது. இருந்த போதிலும் சட்டத்தை நம்புகிறோம். எனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என, நீதி அரசர்கள் உரிய நீதி வழங்குவார்கள், என்று நம்பிக்கை வைத்துள்ளோம். மேலும், தமிழக முதல்வருக்கு அளித்த புகாரின் அடிப்படையில் முதல்வர் அதற்கு நடவடிக்கை எடுப்பார் என்றும் நம்புகிறோம்.
சட்டப் போராட்டம்
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். காவல்துறை, நீதித்துறை மற்றும் அரசு உரிய விசாரணை மேற்கொண்டு எனது மகளின் இறப்புக்கு நீதி வழங்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நீதி கிடைக்கும் வரை எனது சட்டப் போராட்டம் தொடரும்" என அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications