பயணிகளை கவர்ந்திழுத்த மதுரை-சென்னை தேஜஸ் ரயில்.. அமோக வரவேற்பால் ரயில்வே துறை உற்சாகம்
Recommended Video
திருச்சி: மதுரை-சென்னை இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த ரயிலில் திருச்சி-சென்னை இடையிலான சேவைக்கே இருக்கைகள் நிரம்பி விடுகின்றன. இந்த ரயில் திருச்சி, கொடைரோடு ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது. வாரத்தில் வியாழக்கிழமை தவிர மற்ற நாட்கள் இயக்கப்படும் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த ரயில் சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு பகல் 12.30 மணிக்கு சென்றடைகிறது. திருச்சிக்கு காலை 10.20 மணிக்கு வந்து காலை 10.23 மணிக்கு புறப்படுகிறது. இதேபோல மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு சென்றடைகிறது. திருச்சிக்கு மாலை 4.50 மணிக்கு வந்து மாலை 4.52 மணிக்கு புறப்படுகிறது.

பயணிகள் ஆர்வம்
பயணிகள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட சொகுசு பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் பகல் நேர பயணத்தில், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக குளு, குளு வசதியுடன் கூடிய இந்த ரயிலில் அதிகம் பேர் பயணம் செய்கின்றனர்.

முக்கிய பிரமுகர்களும் ஆர்வம்
இந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயண நேரம் குறைவு என்பதாலும், சொகுசு இருக்கைகள், ஏ.சி. வசதி உள்ளிட்டவை இருப்பதாலும் தொழிலதிபர்கள் துவங்கி பல்வேறு முக்கிய பிரமுகர்களும் இதில் பயணிக்கின்றனர். மேலும் அலுவலக பணி நிமித்தமாக பயணிக்க கூடியவர்கள் உள்ளிட்டவர்களும் இந்த ரயிலில் பயணிக்க தொடங்கி உள்ளனர். திருச்சியில் இருந்து சென்னை செல்வதற்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக அனைத்து தரப்பினரும் கருதுவதே இந்த ரயிலில் கூட்டம் அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது

அதிகரிக்கும் வெயிட்டிங் லிஸ்ட்
திருச்சி-சென்னைக்கு சேர்கார் வகுப்பு டிக்கெட் கட்டணம் ரூ.990 ஆகும். எக்ஸ்சிகியூடிவ் வகுப்பு கட்டணம் ரூ.1840 ஆகும். உணவு மற்றும் முன்பதிவு கட்டணம், ஜி.எஸ்.டி. உடன் சேர்த்து இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உணவு தேவையில்லை என்றால் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது தெரிவித்துவிடலாம். மேலும் தேஜஸ் ரயிலில் சென்னை-திருச்சி இடையே இருக்கைகள் விரைவில் நிரம்பி விடுகின்றன. காத்திருப்போர் பட்டியலின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்துள்ள ரயில்வே அதிகாரிகள், துவக்கத்தில் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு குறைவாக இருந்தது. ஆனால் தற்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதனால் தான் கடந்த சில நாட்களாக ரயிலில் காத்திருப்போர் பட்டியலின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றனர்.

உணவு கட்டணம்
இந்த ரயிலில் சேவை குறித்து பயணிகள் கூறுகையில் திருச்சியில் இருந்து சென்னை செல்வதற்கு இந்த ரயில் பயனுள்ளதாக உள்ளது. இருக்கைகளில் பயணிகள் பார்வையிடும் வகையில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி. திரையில் இந்தி மொழி படங்கள் தான் அதிகம் உள்ளன. உணவுக்கான கட்டணத்தை குறைத்து வசூலித்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளனர். மேலும் சென்னையில் இருந்து காலை புறப்படுவதற்கு பதிலாக மதுரையில் இருந்து அதிகாலை புறப்படும் படியும், மாலையில் சென்னையில் இருந்து புறப்பட்டு வரும்படியும் ரயிலின் நேரத்தை மாற்றி அமைத்தால் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் மேலும் வரவேற்பு அதிகமாக இருக்கும். ஏழை, எளிய நடுத்தர பயணிகளும் பயணிக்கும் வகையில் கட்டணத்தை குறைத்தால் அனைத்து தரப்பினரும் இந்த ரயிலை பயன்படுத்தலாம் என கூறியுள்ளனர்












Click it and Unblock the Notifications