திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 52 பேருக்கு கொரோனா - 24 பேர் டிஸ்சார்ஜ்
திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது.
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் அந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இருந்து நேற்று மட்டும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 21 பேர், பெரம்பலூர், கடலூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 24 பேர் பூரண குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பலரும் திரும்பத் தொடங்கியிருக்கின்றனர் இதனால் கொரோனா வைரஸ் பல மாவட்டங்களிலும் அதிகரித்து வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஞாயிறன்று மாவட்டம் முழுவதும் 36 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில் திங்கட்கிழமை ஒரே நாளில் மட்டும் 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இவர்களில் ஒருவர் மட்டும் வெளிநாட்டில் இருந்து வந்தவர் ஆவார். மற்ற 51 பேரும் திருச்சி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள்.
இவர்களில் மணப்பாறை பகுதியில் மட்டும் 14 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆவார். மணப்பாறை பழைய காலனி, ராஜீவ் நகர், வையம்பட்டி மற்றும் மருங்காபுரி பகுதியில் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி நகரில் ஏற்கனவே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பெரிய கடை வீதி, மேலப்புலிவார்டு சாலை, தேவதானம், எடமலைப்பட்டிபுதூர், கருமண்டபம், தில்லைநகர், உறையூர், திருவெறும்பூர் பகுதிகளில் உள்ளவர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதன்மூலம் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 258ல் இருந்து 310 ஆக உயர்ந்து உள்ளது.
இந்தநிலையில் திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இருந்து திங்கட்கிழமையில் இருந்து மட்டும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 21 பேர், பெரம்பலூர், கடலூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 24 பேர் பூரண குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
கரூர் வெங்கமேடு வி.வி.ஜி. நகரை சேர்ந்த 40 வயதுடைய ஓட்டல் தொழிலாளி கடந்த 19ஆம் தேதி சென்னையில் இருந்து வந்தார். அவர் உடல் நிலை சரியில்லை எனக்கூறி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மூச்சு திணறல் இருந்தது. இதனையடுத்து சளி மற்றும் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதிக்கப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து தொடர் சிகிச்சையில் இருந்த அவருக்கு நேற்று முன்தினம் இரவு மூச்சுதிணறல் ஏற்பட்டது. பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து உடல் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.