மின்கட்டண உயர்வு.. இதெல்லாம் நியாயமே கிடையாது.. திமுக அரசால் கொதித்தெழுந்த திருமாவளவன்!
தூத்துக்குடி: ‛‛தமிழகத்தின் மின்கட்டண உயர்வு குறித்து மின்துறை அமைச்சர் விளக்கி உள்ளார். இருப்பினும் மின்கட்டண உயர்வை நியாயப்படுத்த முடியாது. இந்த கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும்'' என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று சென்னையில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளன் வந்தார்.
சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடி விமான நிலையம் வந்திறங்கிய தொல் திருமாவளவன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பாசிச அரசுக்கு எடுத்துக்காட்டு
மத்தியில் ஆளும் பாஜக அரசு நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. மக்கள் பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் எனக்கூறிய 24 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக 4 பேர் கூட்டத்தொடர் முழுவதும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த செயல் பாசிச அரசு என்பதற்கு எடுத்துக்காட்டு. மேலும் விலைவாசி உயர்வு குறித்து பேச எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மேலும் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கல்வி நிறுவனங்களில் மாணவர் பாதிப்பு
தமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்களை பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக கனியாமூர் சம்பவத்தில் மாணவி சாவுக்கு நீதி வேண்டும். அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மேலும் மடைமாற்றம் செய்யப்பட்டு பள்ளியை தாக்கியவர்கள் கலவரத்தை உண்டாக்கியவர்கள் என திசைதிருப்பும் செயல் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் உளவுத்துறை மற்றும் போலீஸ் துறை விழிப்பாக செயல்பட்டிருந்தால் கலவர சம்பங்கள் நடந்திருக்காது என்பது அனைவரின் கருத்தாக உள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும்.

தனி கண்காணிப்பு அவசியம்
தமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு தொடர்பாக அரசு தனி கண்காணிப்பு செய்ய வேண்டும். இதற்கு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமரை அமரவைத்து தமிழர்களின் பாரம்பரியம் குறித்து முதல்வர் பாடம் எடுத்து இருக்கிறார். என்எல்சி நிறுவனத்தில் பொறியாளர் தேர்வில் தமிழர் ஒருவர் கூட இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற அடுத்தகட்ட நடவடிக்கையை என்எல்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

நியாயப்படுத்த முடியாது
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து மின்துறை அமைச்சர் விளக்கமளித்து உள்ளார். இருப்பினும் மின்கட்டண உயர்வை நியாயப்படுத்த முடியாது. சாதாரண ஏழை எளிய மக்களை பாதிக்காத வகையில் மின்கட்டணம் இருக்க வேண்டும். மின்கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications