தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. ஒருநபர் விசாரணை ஆணையத்தில் முன்னாள் கலெக்டர் வெங்கடேஷ் ஆஜர்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். பல நாட்கள் போராட்டம் அமைதியாக நடந்தது. கடந்த 2918-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றபோது திடீரென பதற்றம் உருவானது.
அப்போது போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
'பீகாரில் கொரோனா 3வது அலை ஏற்கனவே தொடங்கிவிட்டது..' முதல்வர் நிதீஷ் குமார் பரபர பேச்சு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
இந்த ஆணையம் இதுவரை 33 கட்ட விசாரணையை முடித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பத்திரிகையாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அரசு துறையை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என பலரிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தியது. 1031 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
34-வது கட்ட விசாரணை
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் ஒரு சில கருத்துக்கள் தெரிவித்து இருந்தார். இதனால் அவரும் ஆஜராக வேண்டும் என்று ஒருநபர் ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் பலகட்ட விசாரணையிலும் நடிகர் ரஜினி ஆஜராகவில்லை. ஒருநபர் ஆணையம் இந்த மாத தொடக்கத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியது. இந்த நிலையில் தற்போது 34-வது கட்ட விசாரணை நடந்து வருகிறது.
காவல் அதிகாரிகளிடம் விசாரணை
கடந்த 27-ம் தேதி முதல் விசாரணை தொடங்கிய நிலையில் நெல்லை மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளரும், தற்போதைய சென்னை குடியுரிமை பிரிவு அதிகாரியுமான அருண் சக்திகுமார், கோவை போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார், துணை போலீஸ் கமிஷனர் ஜெயச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
முன்னாள் கலெக்டர் வெங்கடேஷ் ஆஜர்
இன்று 3-வது நாளாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றபோது அப்போது கலெக்டராக இருந்த வெங்கடேஷ், ஒருநபர் ஆணையம் முன்பு இன்று விசாரணைக்கு ஆஜரானார். நாளை 34-வது கட்ட இறுதி விசாரணையில் தூத்துக்குடி மாவட்ட அதிகாரியாக பணியாற்றிய வீரப்பன் ஆஜராக உள்ளார்.