என்னாது.. தூத்துக்குடியில் மறுபடியும் ஸ்டெர்லைட் திறக்கப்படுகிறதா? விடாத வேதாந்தா.. விற்க மறுத்த அனில்
ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்யும் முடிவை வேதாந்தா நிறுவனம் கைவிட்டு மீண்டும் அதை திறந்து உற்பத்தியை தொடங்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி: பொதுமக்களின் தொடர் போராட்டம் மற்றும் துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை மூடப்பட்டு அதற்கு எதிராக வழக்கு நடைபெற்று வரும் நிலையில், அதை விற்பனை செய்ய எடுத்த முடிவை வேதாந்தா நிறுவனம் கைவிட்டு மீண்டும் அதை திறந்து உற்பத்தியை தொடங்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடியில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த காப்பர் உருக்கு ஆலையின் மூலம் டன் கணக்கில் காப்பர் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்த ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட கொடிய பாதிப்புகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பல நாட்களாக அப்பகுதி மக்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறுபக்கம் நீதிமன்றத்திலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
வாழ்வாதாரம் பாதிப்பு.. ஸ்டெர்லைட் ஆலையை திறங்க.. துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள் கலெக்டரிடம் மனு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
ஒரு கட்டத்தில் காப்பர் உருக்கு ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 13 பேரை காவல் துறை சுட்டுக்கொன்றது நாட்டையே அதிர வைத்தது. இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்தது.
அருணா ஜெகதீசன் ஆணையம்
இதனை எதிர்த்து வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையம் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. அதில் அப்போதைய அதிமுக அரசு, காவல்துறையின் செயல்பாடு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
அனில் அகர்வால்
முன்னதாக கடந்த ஆண்டு தனியார் இதழுக்கு பேட்டியளித்த வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால், நிச்சயம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்போம் என உறுதியளித்தார். வெளிநாட்டு தூண்டுதலின் பேரில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது. வெளிநாட்டு சக்திகள் இந்தியாவில் காப்பர் தயாரிக்கப்படுவதை விரும்பாமல் போராட்டத்தை தூண்டி விட்டனர்.
மக்கள் ஆதரவு
உள்ளூர் மக்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். ஸ்டெர்லைட் ஆலையை இடமாற்றம் செய்வதற்கு பல மாநிலங்கள் எங்களுக்கு கோரிக்கை விடுத்தனர். எங்கள் நிறுவனம் தூத்துக்குடியில் அதிக வேலை வாய்ப்பை வழங்கி வந்தது. ஒருவரை கூட நாங்கள் பணி நீக்கம் செய்ததில்லை. உச்சநீதிமன்றம் வழங்கப்போகும் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
அழைக்கும் ஆந்திரா
ஆந்திரா போன்ற மாநிலங்கள் ஆலை தொடங்க அழைப்பு விடுத்துள்ளன. எந்த முடிவையும் அவசரமாக நாங்கள் எடுக்க விரும்பவில்லை. எங்களால் வேறு மாநிலத்துக்கு செல்ல முடியும். ஆனால், 20 ஆண்டுகளாக தூத்துக்குடியில் இருக்கிறோம். எங்களுக்கு அந்த மக்களை பிடிக்கும். தூத்துக்குடி மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது." என்றார்.
விற்பனை முடிவு
இந்த நிலையில் கடந்த ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய வேதாந்தா முடிவு செய்தது. இதனை வாங்க விரும்புவோம் 2022 ஜூலை 4 விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது. அதை வாங்க 7 நிறுவனங்கள் முன் வந்ததாகவும் அனில் அகர்வால் அறிவித்தார். அதன் பின்னர் எந்த நிறுவனம் ஸ்டெர்லைட்டை வாங்கியது என்று எந்த தகவலும் வெளியாகவில்லை.
மீண்டும் ஆலையை திறக்க திட்டம்
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்யும் முடிவை வேதாந்தா நிறுவனம் கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான முயற்சியில் அந்த நிறுவனம் இறங்கி இருக்கிறது. இதற்காக தூத்துக்குடி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதை திறக்க நிறுவனம் முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.