தூத்துக்குடி கோவிலில் கலாட்டா கல்யாணம்.. கடும் போராட்டத்துக்கு பின் திருநங்கையை மணந்த வாலிபர்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் சிவன் கோயிலில் நேற்று நடைபெற இருந்த திருநங்கையின் திருமணத்தை நடத்த ஒப்புக் கொண்ட நிர்வாகம் திடீரென மறுப்பு தெரிவித்ததால் திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்களுக்கு திருமணம் நடந்தது.
தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சேர்ந்தவர் அருண்குமார். டிப்ளமோ என்ஜினீயரான இவர் ரயில்வேயில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் ஸ்ரீஜா. திருநங்கை. இவர் தூத்துக்குடியில் உள்ள வ.உ. சிதம்பரனார் கல்லூரியில் ஆங்கில பட்டப்படிப்பு படித்து வருகிறார். அருண்குமாரும், ஸ்ரீஜாவும் கடந்த ஆறு வருடங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.
[கட்டிங்... ஷேவிங்.. குக்கிங்.. எதா இருந்தாலும் பண்றேங்க.. ஓட்டு மட்டும் போட்ருங்க போதும்!]
திருமணம்
இவர்களது காதல் விவரம் வீட்டுக்கு தெரியவரவே இருவீட்டாரின் சம்மதத்துடன் அருண்குமாரும், ஸ்ரீஜாவும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.அதன்படி இருவீட்டார் பெற்றோரின் ஏற்பாட்டின் பேரில் தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் சிவன் கோவிலில் வைத்து இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்கான
ஏற்பாடுகளை உறவினர்கள் செய்தனர்.
பதிவு
இதற்காக திருமண பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு வினியோகிக்கப்பட்டன. மேலும் திருக்கோவில் அலுவலகத்தில் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்காக முன் பதிவு செய்யப்பட்டது. இதற்காக கோவில் அலுவலகத்தில் ரூ. 600 முன்பணம் செலுத்தி அருண்குமார், ஸ்ரீஜா பெயர் பதிவு செய்ததாக தெரிகிறது.
நடைமுறை
இந்த நிலையில் நேற்று காலை திருமணம் செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளுடன் அருண்குமாரும், ஸ்ரீஜாவும் சிவன் கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் திருக்கோவிலில் உள்ள கோவில் அலுவலகத்திற்கு சென்று திருமண பதிவினை உறுதி செய்வதற்கான நடைமுறைகளை மேற்கொண்டனர்.
|
உறவினர்கள் அதிர்ச்சி
அப்போது திருக்கோவில் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அருண்குமார், ஸ்ரீஜா திருமணத்தை இந்த கோவிலில் நடத்த முடியாது என தெரிவித்ததாக தெரிகிறது. இதை கேட்டு அருண்குமார் ஸ்ரீஜா உள்பட அவர்களுடன் வந்திருந்த உறவினர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கோவிலில் ஏன் திருமணத்தை நடத்த முடியாது என்பது குறித்து அவர்கள், அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு, அதிகாரிகள் தகுந்த பதிலளிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
விரைந்த போலீஸ்
இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் திருக்கோவில் அலுவலகத்தைச் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினர். இதனால் கோவில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸார் திருக்கோவில் அலுவலகத்திற்கு விரைந்தனர்.
|
ஆரவாரம் மகிழ்ச்சி
அவர்கள் திருநங்கைகள் மற்றும் கோயில் அதிகாரிகளுக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பகல் 11.45 மணியளவில் இருவரது திருமணமும் நடைபெற்றது. இதனால் மகிழ்ச்சி அடைந்த திருநங்கைகள் கை தட்டி ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.