கள ஆய்வை அடுத்து! சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்! திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆட்சியர்கள் அதிரடி மாற்றம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் வேலூர் மண்டலத்தில் கள ஆய்வு நடத்திய நிலையில் இந்த பணியிட மாற்றம் உத்தரவு வந்திருக்கிறது.
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக வளர்மதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்திலிருந்து நிர்வாக வசதிக்காக ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. இதனையடுத்து இரண்டு மாவட்டங்களுக்கும் புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது இரண்டு மாவட்ட ஆட்சியர்களும் மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில்,
சமூக பாதுகாப்புத்துறை இயக்குநராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி வளர்மதி ராணிப்பேட்டை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே ராணிப்பேட்டை ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். திருப்பத்தூர் ஆட்சியராக பணியாற்றி வந்த அமர் குஷ்வாஹா சமூக பாதுகாப்புத்துறை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த 2 நாட்களாக முதலமைச்சர் வேலூர் மண்டலத்தில் அரசு முறை பயணம் மேற்கொண்டு கள ஆய்வு நடத்திய நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவு மூலம் ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்களின் செயல்பாடுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்தியளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. கள ஆய்வின் தொடக்கத்திலேயே இரண்டு ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது தமிழ்நாடு முழுவதும் உள்ள இதர ஆட்சியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.