சபதம் முதல் "சாமி தரிசனம்" வரை... அதிமுகவை கைப்பற்ற..? சூறாவளி பயணத்தில் சசிகலா
விழுப்புரம்: ஜெயலலிதா மரணத்துக்கு பின் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா, தமிழ்நாடு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்துவிட்டு சென்றார்.
Recommended Video
ஆனால், பெங்களூரு சிறையிலிருந்து வெளியே வரும்போது சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமியே எதிராக நின்றார்.
அவரிடமிருந்து அதிமுகவை மீட்க தினகரனால் தொடங்கப்பட்ட அமமுகவும் தேர்தல் அரசியலில் காணாமல் போய்விட்டது.

சசிகலா மீது தினகரன் அதிருப்தி
சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் சசிகலா அமமுகவுக்கு உதவுவார் என தினகரன் திட்டமிட, அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு எடுக்கப்போவதாக அறிவித்து தினகரன் மற்றும் தனது ஆதரவாளர்களின் அதிருப்திக்கு ஆளானார் சசிகலா. கடைசி வரை அமமுகவை சசிகலா கண்டுகொள்ளாததால் இருவருக்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டு இருக்கிறது.

தவறாகும் சசிகலா கணக்கு
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த பிறகாவது அக்கட்சியை கைப்பற்றிவிடலாம் என சசிகலா போட்ட கணக்கும் தவறாகிவிட்டது.
அதிமுகவை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் இருந்து கைப்பற்ற ஏதாவது ஒரு அடியை சசிகலா தரப்பு எடுத்து வைத்தால், மறு நாளே டெல்லி உதவியோடு அதை தகர்த்துவிடுகிறார் எடப்பாடி பழனிசாமி.

ஆடியோ அரசியலும் கைகூடவில்லை
சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுடன் சசிகலா தொலைபேசியில் பேசி அந்த ஆடியோவை ஊடகங்களுக்கு வழங்கி வந்தார். எடப்பாடி பழனிசாமியோ அவருடன் பேசிய நிர்வாகிகளை கட்சியிலிருந்தே நீக்கிக் கொண்டிருந்தார். சில நாட்கள் பரபரப்பாக பேசப்பட்ட சசிகலா ஆடியோ விவகாரம் காலப்போக்கில் காணாமல் போனது. அந்த யுக்தியும் வெற்றிபெறாததை அறிந்த சசிகலா சில மாதங்கள் அமைதியாக இருந்தார்.

தீவிர அரசியலில் சசிகலா
இதனிடையே கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி கிருஷ்ணகிரியில் பேசிய சசிகலா விரைவில் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என அறிவித்தார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அவர் ஆன்மீக பயணம் மேற்கொண்டு வருகிறார். கோவில் குளங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வரும் சசிகலாவை தரிசிக்க அவரது ஆதரவாளர்களும் திரள்வதால் அது ஆன்மீகப் பயணமா அரசியலில் பயணமா என்ற கேள்வி எழத்தொடங்கி இருக்கிறது.

சசிகலாவை சந்தித்த ஓ.பி.எஸ். சகோதரர் நீக்கம்
இதனிடையே இம்மாத தொடக்கத்தில் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என தேனி மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே சமயம் ஆன்மீகப் பயணத்தின் ஒரு பகுதியாக திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற சசிகலாவை ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா நேரில் சந்தித்து பேசினார். அடுத்தநாளே அவரை கட்சியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தது அதிமுக தலைமை.

விழுப்புரத்தில் சசிகலா சாமி தரிசனம்
இந்நிலையில் ஆன்மீக பயணத்தின் இரண்டாம் கட்டமாக இன்று சென்னையிலிருந்து தஞ்சைக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டுள்ளார் சசிகலா. அவ்வழியே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சென்ற அவருக்கு ஆதரவாளர்கள் மேளதாளங்களுடன் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். சசிகலா வருகையை ஒட்டி கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

முன்னாள் அமைச்சர் ஆனந்தன் பங்கேற்பு
இதைத் தொடர்ந்து தீவனூர் பகுதியில் உள்ள சுயம்பு பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக சசிகலா புறப்பட்டுச் சென்றார். அங்கு முன்னாள் அமைச்சர் ஆனந்தன், ஆவின் வைத்தியநாதன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் அவருடன் வருகை தந்திருந்தனர். அதன் பின்னர் செஞ்சி மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் சாமி தரிசனம் செய்து தஞ்சைக்கு புறப்பட்டார் சசிகலா.

சசிகலாவை சந்தித்த சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள்
கடந்த சில வாரங்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தீவிர ஆதரவாளரும் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளராகவும் இருந்த முகமது சரீப், சசிகலாவை தனது ஆதரவாளர்களுடன் சந்தித்து ஆதரவு தெரிவித்தது விழுப்புரம் மாவட்டம் அதிமுகவில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று அவர் விழுப்புரத்துக்கு விஜயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications