'கட்சி மாறினால் கவுன்சிலர்களை வெட்டுவேன்' என்று கூறிய அதிமுக பிரமுகரின் கால் முறிவு.. என்ன நடந்தது?
விருதுநகர்: அதிமுகவில் ஜெயித்து எந்த கவுன்சிலர் கட்சி மாறினாலும் அவரை வீடுபுகுந்து வெட்டுவேன் என்று சர்ச்சையாக பேசிய சாத்தூர் அதிமுக ஒன்றிய செயலாளரின் கால் முறிந்தது. போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியபோது அவரது கால் முறிந்ததாக கூறப்படுகிறது.
Recommended Video
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கிடையே கடந்த 2-ம் தேதி விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் சாத்தூர் நகர்மன்ற தேர்தல் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சாத்தூர் அதிமுக ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி பேசியது கடும் சர்ச்சையானது.

' கவுன்சிலரை வீடுபுகுந்து வெட்டுவேன்'
''அதிமுகவில் இரட்டை இலையில் ஜெயித்து எந்த கவுன்சிலர் கட்சி மாறினாலும் அவரை வீடுபுகுந்து வெட்டுவேன். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன்கிட்ட சொல்லிட்டு வெட்டுவேன். என் வெட்டுதான் முதல் வெட்டாக இருக்கும்'' என்று கடுமையாக பேசினார் சண்முகக்கனி. கட்சியை வைத்து ஜெயித்துவிட்டு, எவரவர் கட்சி மாறுகிறார்களோ, அவருடைய போஸ்ட்மார்ட்டம் அரசு மருத்துவமனையில்தான் நடக்கும் என்றும் அவர் அதிரடியாக பேசினார்.

அதிமுகவில் எதிர்ப்பு
இந்தப் பேச்சால், என் மேல் கேஸ் கொடுத்தாலும் பிரச்சனை இல்லை என்றும் சண்முகக்கனி ஆவேசமாக பேசினார். அதிமுக ஒன்றிய செயலாளரின் இந்த மிரட்டல் பேச்சு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. வருகிறது. அவரின் இந்த மோசமான பேச்சுக்கு சொந்த கட்சியான அதிமுகவில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. மாநில உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இப்படியா மிரட்டுவது'? என் சண்முகக்கனி மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர்.

கைது செய்ய சென்ற போலீசார்
இந்த சர்ச்சை பேச்சு தொடர்பாக சாத்தூர் காவல் நிலைய போலீசார், சண்முகக்கனி மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது , கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தலைமைறைவான அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் , சண்முகக்கனி சாத்தூர் அருகே உள்ள மேட்டுப்பட்டியில் உள்ள அவரது சொந்த ஊரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

நடந்தது இதுதான்
இதனை தொடர்ந்து சண்முகக்கனியை கைது செய்வதற்காக போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் சண்முகக்கனி தப்பி ஓட முயன்றுள்ளார். அப்போது வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்தபோது அவரின் கால் முறிந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வருவதால் சண்முகக்கனியை தற்போது கைது செய்ய முடியவில்லை. உடல்நிலை சீரானதும் சண்முகக்கனி கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications