பொள்ளாச்சி விவகாரத்தில் 7 ஆண்டுகளாக தமிழக போலீஸின் கைகள் கட்டப்பட்டனவா?.. ஸ்டாலின் கேள்வி
திருமங்கலம்: மக்களுக்கு வாக்குறுதி அளித்த ஒரு திட்டத்தையாவது பிரதமர் நிறைவேற்றினாரா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலு்ம பொள்ளாச்சி விவகாரத்தில் 7 ஆண்டுகளாக தமிழக போலீஸின் கைகள் கட்டப்பட்டனவா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
விருதுநகர் மக்களவை தொகுதி வேட்பாளர் மாணிக்கம் தாகூர்,
சாத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.வி. சீனிவாசன் ஆகியோரை ஆதரித்து தொகுதிக்குள்பட்ட திருமங்கலத்தில் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் இரு வேட்பாளர்களையும் ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் எதையாவது மோடி நிறைவேற்றினாரா. மோடி தலைமையிலான பாசிச ஆட்சியை அகற்றும் தேர்தல் இது.

வாக்குறுதி
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றையும் மோடி நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேறியதா

15 லட்சம் டெபாசிட்
வெளிநாடுகளில் இருந்து கருப்பு பணம் எதையாவது மீட்டார்களா. வேளாண் விளை பொருட்களின் விலை இரு மடங்கு உயர்த்தப்பட்டதா. இந்தியர்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுவிட்டதா.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை
தமிழகத்தில் ஒரு ஸ்மார்ட் சிட்டியாவது செயல்படுத்தப்பட்டதா. தமிழகத்தில் எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணத்தை மோடி ஒழித்தாரா. நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு இரு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி தமிழக அரசு அனுப்பிய சட்டம் என்னவானது.

கையெழுத்து
2006-ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக்கு வந்த போது 7000 கோடி விவசாய கடன் ரத்து செய்யப்பட்டது. தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றவுடன் கருணாநிதி கையெழுத்திட்டது வேளாண் கடன் ரத்துதான்.

உத்தரவாதம்
ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ. 6000 வீதம் ஆண்டுக்கு ரூ 72 ஆயிரம் வழங்கப்படும் என்ற ராகுல் காந்தி அறிவித்த திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும். பொருளாதார ஆலோசகர்களை கலந்தாலோசித்து அறிவிக்கப்பட்ட வருவாய் உறுதி திட்டத்தை நிச்சயம் ராகுல் நிறைவேற்றுவார். ராகுல் அறிவித்த திட்டத்துக்கு நான் உத்தரவாதம் கொடுக்கிறேன்.

தமிழக அரசு
பொள்ளாச்சியில் 7 ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். கடந்த 7 ஆண்டுகளாக தமிழக போலீஸாரின் கைகள் கட்டப்பட்டுவிட்டதா. பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகளை காப்பாற்றவே தமிழக அரசு முயற்சித்தது. 4 ஆண்டுகளில் கெட்டு போன ரத்தத்தை நோயாளிகளுக்கு ஏற்றியதில் 15 பேர் மரணம் அடைந்துள்ளனர். அரசு மருத்துவமனைகள் கொலைக் கூடாரமாகியுள்ளன.

சசிகலாவின் கால்களில் விழுந்தவர்
ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது சிகிச்சை தொடர்பான முழு விவரம் வெளியானதா. சசிகலாவின் கால்களில் விழுந்து முதல்வரானவர் எடப்பாடி பழனிச்சாமி.

அமையும்
முதல்வர் பதவி பறிபோனவுடன் சமாதிக்கு சென்று தியானம் செய்து ஆவியுடன் பேசியவர் ஓ.பன்னீர்செல்வம். சுயநினைவு இல்லாத போது ஜெயலலிதா எப்படி கைரேகை வைத்தார் என நீதிமன்றமே கேள்வி எழுப்பியது. தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications