மனைவியுடன் காரில் சென்ற பாஜக நிர்வாகி.. எதிரே வந்த லாரி! ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோர விபத்தில் பலி
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியை சேர்ந்தவர் கதிரேச பாண்டியன். பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.
இவர் தனது மனைவி ராமலெட்சுமியுடன் சொந்த ஊரான ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ள கிருஷ்ணன் கோவில் பகுதியில் இவரது கார் சென்றுகொண்டிருந்தது.
அதே வழியாக தேனியில் இருந்து ராஜபாளையம் நோக்கி எதிரே வந்து கொண்டிருந்த லாரி இவரது காருடன் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் பாஜக நிர்வாகி கதிரேசப்பாண்டியனும் அவரது மனைவி ராமலட்சுமியும் பலத்த காயமடைந்தனர்.
இந்த விபத்தை கண்ட அங்கிருந்த மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸை தொடர்புகொண்டு வரவழைத்தனர். காயமடைந்த பாஜக நிர்வாகி மற்றும் அவரது மனைவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் பாஜக நிர்வாகி கதிரேசப்பாண்டியன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயமடைந்த அவரது மனைவி ராமலட்சுமி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து காவல்துறை நடத்திய விசாரணையில் கதிரேசப்பாண்டியன் கவனக்குறைவு காரணமாக காரை ஓட்டி வந்து லாரியின் மீது மோதினார் என தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை அழகர் கோவிலில் பயங்கர தீ விபத்து.. 'அதிர்ச்சி’ - உடனே ஸ்பாட்டுக்கு விரைந்த அமைச்சர், கலெக்டர்!