விருதுநகர் பாலியல் வன்கொடுமை.. நால்வர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்.. கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு
விருதுநகர்: விருதுநகரில் 22 வயது இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சிறுவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் மற்ற நால்வரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் மேகநாத ரெட்டி இன்று உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகரில் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டப்பட்டார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணையை துவங்கினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இளம்பெண் பலாத்காரம்
அதாவது ஹரிஹரன் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண்ணுடன் உறவு வைத்து வீடியோ எடுத்துள்ளார். பிறகு இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இந்த வேளையில் அந்த பெண்ணுக்கு இன்னொருவருடன் திருமண ஏற்பாடுகள் நடந்தன. இதையடுத்து ஆபாச வீடியோவை வைத்து ஹரிஹரன் மிரட்டி இளம்பெண்ணை வன்புணர்வு செய்துள்ளார். மேலும் நண்பர்களுக்கு வீடியோ அனுப்பிய நிலையில் அவர்கள் இளம்பெண்ணை மிரட்டி உறவுக்கு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

8 பேர் கைது
இதுதொடர்பாக ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், திமுக கட்சியை சேர்ந்த ஜூனைத் அகமது மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். மாணவர்கள் 18 வயதுக்கு குறைவானவர்கள் என்பதால் மதுரை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். மற்ற 4 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே திமுகவில் இருந்து ஜூனைத் அகமது நீக்கம் செய்யப்பட்டார்.

சிபிசிஐடி விசாரணை
சம்பவம் குறித்து விருதுநகர் பாண்டியன் நகர் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவில் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. 8 பேர் மீதும் சிபிசிஐடி போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். கைது செய்யப்பட்ட 8 பேரிடமும், பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் போலீசார் விசாரித்தனர். இதற்கிடையே 4 சிறுவர்களுக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

நால்வர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்
இதனால் ஹரிஹரன், பிரவீன், மாடசாமி, ஜூனைத் அகமது ஆகியோர் மதுரை மத்திய சிறையில் உள்ளனர். இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தது. இதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்நிலையில் ஹரிஹரன், பிரவீன், மாடசாமி, ஜூனைத் அகமது ஆகிய நால்வரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி இன்று உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதில் இதில் ஜூனைத் அகமது, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications