மோடியிடம் ஜோ பைடன் மீண்டும் உறுதி செய்த இரண்டு விஷயம் .. அமெரிக்கா இந்தியாவிற்கு கொடுத்த ஆதரவு
வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடியுடனான முதல் தனிப்பட்ட சந்திப்பின் போது, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் மற்றும் அணுசக்தி விநியோகிக்கும் நாடுகள் குழுவில் இந்தியா நுழைவதற்கு அமெரிக்கா எப்போதும் ஆதரவு அளிக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி அளித்தார்.
வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் நடந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் -இந்திய பிரதமர்நரேந்திர மோடி சந்திப்பு தொடர்பாக கூட்டாக இருநாட்டு தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையில், அதிபர் பைடன், பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தையின் போது , ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவராக ஆகஸ்ட் 2021 ல் இருந்த இந்தியாவின் வலுவான தலைமைத்துவத்தை" பாராட்டினார்.,
பாமகவின் இலக்கு 5 மாவட்டங்கள்... 3 நாள் மட்டுமே பரப்புரை பயணம்... களத்தில் இறங்கும் அன்புமணி..!
மேலும் அதிபர் பைடன், ஐநா பாதுகாப்பு கவுன்சிலை திருத்தவும், இந்தியாவை நிரந்தர உறுப்பினருக்குவதற்கு அமெரிக்காவின் ஆதரவையும், முழு ஒத்துழைப்பும் வழங்குவதாக கூறினார். இந்தியா உள்பட ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடங்களை பெற விரும்பும் மற்ற நாடுகளையும் பைடன் ஆதரித்தார்.
அணுசக்தி குழு
பாதுகாப்பு கவுன்சிலின் நீண்டகால நிலுவையில் உள்ள சீர்திருத்தத்தை வலியுறுத்த ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகளில் இந்தியா முன்னணியில் இருப்பதால், அதிபர் பைடனின் ஆதரவு, இந்தியாவின் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தத்திற்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கிறது. ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகும் தகுதி இந்தியாவிற்கு உள்ளது என்று பைடன் கூறினார். ஜோ பைடன், ஐநாவின் உயர்மட்ட அமைப்பு, அணுசக்தி குழுவான என்எஸ்ஜியில் இந்தியாவை சேர்ப்பதற்கான அமெரிக்க ஆதரவை மீண்டும் உறுதி செய்தார்.
சீர்திருத்தங்கள்
ஐநா பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்கள் மீதான பேச்சுவார்த்தைகளை இனியும் தாமதிக்க முடியாது என்று இந்தியா ஜூன் மாதம் வலியுறுத்தியது. ஐநா பொதுச் சபையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பிரேசில், ஜெர்மனி, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகளால் திருத்தமும் முன்மொழியப்பட்டது.
இரண்டு வருடம்
தற்போது, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகள் உள்ளன. நிரந்தரமற்ற உறுப்பு நாடுகள், க்கிய நாடுகள் பொதுச் சபையால் இரண்டு வருட காலத்திற்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
நிரந்த உறுப்பினர்கள்
தற்போதைய நிலையில் ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள், மற்ற நாடுகள் கொண்டு வரும் எந்தவொரு உறுதியான தீர்மானத்தையும் வீட்டோ அதிகாரம் மூலம் ரத்து செய்ய முடியும். சமகால உலக யதார்த்தத்தை பிரதிபலிக்கும் வகையில் நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.