"20,000 முறை!" சுற்றி வளைத்துத் தாக்கிய கில்லர் தேனீக்கள்! தாய் கண் முன்னே கோமாவுக்கு சரிந்த மகன்
வாஷிங்டன்: அமெரிக்காவில் வித்தியாசமான விலங்கு தாக்குதலால் பாதிக்கப்பட்ட 20 வயது இளைஞர் ஒருவர் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
காட்டுப் பகுதிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகமாகக் காடுகள் அழிக்கப்பட்டு வருகிறது. இதனால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மனித- விலங்கு மோதல் என்றால் புலி, யானை போன்ற விலங்குகள் உடனான மோதல் மட்டுமில்லை. மனிதர்களின் அத்துமீறல் நடவடிக்கையால் சிறு சிறு உயிரினங்கள் கூட கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.

அமெரிக்கா
அமெரிக்காவில் 20 வயது இளைஞன் ஒருவர் ஆப்பிரிக்க கில்லர் தேனீக்களால் 20,000 முறை கொட்டப்பட்டான். இதில் அவரது உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டான். இதனால் அந்த இளைஞர் கோமா நிலைக்கும் தள்ளப்பட்டார். ஆனால், அதன் பிறகு அவர் செய்த சம்பவம் தான் அனைவரையும் வியக்கச் செய்துள்ளது.

ஆஸ்டின் பெல்லாமி
கடந்த வாரம் ஆஸ்டின் பெல்லாமி என்பவர் ஓஹியோவில் தனது வீட்டின் அருகே இருந்த ஒரு மரத்தை வெட்டிக் கொண்டிருந்தார். அந்தச் சமயம் தெரியாமல் தேனீ கூட்டை வெட்டியுள்ளார். இதனால் எதிர்பாராத விதமாக அங்கிருந்த ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்க கில்லர் தேனீக்கள் ஆவேசமடைந்துள்ளன. மேலும், அவை அந்த இளைஞரின் தலை, கழுத்து மற்றும் தோள்களில் தொடர்ச்சியாகக் கொட்டியுள்ளன.

கருப்பு போர்வை
இது தொடர்பாக அவரது தாயார் ஷவ்னா கார்ட்டர் கூறுகையில், "அவனை முதலில் பார்த்த போது, மிரண்டு விட்டேன். தலையில் கழுத்து வரை, கை, கால்கள் என அனைத்திலும் ஒரு கருப்பு போர்வை போர்த்தப்பட்டது போல இருந்தது" என்றார். அன்றைய தினம் ஆஸ்டின் பெல்லாமி மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டு இருந்தார். அப்போது தான் எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்த தேனீ கூட்டையும் வெட்டியுள்ளார்.

தாக்குதல்
மரத்தின் கீழே தான் ஆஸ்டின் பெல்லாமியின் மாமாவும் பாட்டியும் இருந்தனர். இருப்பினும், அவர்களையும் அந்த தேனீக்கள் தாக்கியதால், அவர்களாலும் அந்த இளைஞரைக் காக்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது காயம் மிக மோசமாக இருந்ததால், அவர் மேல் சிகிச்சைக்காக சின்சினாட்டி மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கோமா
வென்டிலேட்டரில் சிகிச்சையில் வைக்கப்பட்ட அவர், கோமா நிலைக்குச் சென்றனர். கிட்டதட்ட ஒரு வாரம் அவருக்கு கோமா நிலையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று தான் அவர் கோமா நிலையில் இருந்து மீண்டார். அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு அளிப்பதாகவும் விரைவில் பூரண குணமடைவார் என எதிர்பார்ப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மோசமான பாதிப்பு
சுமார் 20 ஆயிரம் முறை கில்லர் தேனீக்களால் தாக்கப்பட்ட அவர், 30 தேனீக்களை விழுங்கியும் உள்ளார். மருத்துவமனை ஊழியர்கள் அவரது உடலில் இருந்து தேனீக்களை வெளியே இருந்த வேண்டி இருந்தது. நியூஸ்வீக்கின் தகவல்படி ஒரு ஆப்பிரிக்க கில்லர் தேனீ என்பது வழக்கமான தேனீயை விட ஆபத்தானது அல்ல. அதேநேரம் ஒரு நபர் 10க்கும் மேற்பட்ட முறை தேனீக்களால் கொட்டப்பட்டால், அவருக்கு மோசமான பாதிப்புகள் ஏற்படத் தொடங்கும். வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி உள்ளிட்டவை ஏற்படும். சில நேரங்களில் உயிரிழப்புகளும் கூட ஏற்படும்.












Click it and Unblock the Notifications