"கறுப்பு ஆடுகள்.." ரஷ்யாவில் அமெரிக்க உளவாளிகள்! கோபத்தின் உச்சத்திற்கே சென்ற புதின்.. என்ன நடந்தது
வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா ஆரம்பித்துள்ள போர் தொடர்ந்து வரும் நிலையில், இது தொடர்பாக புதின் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
உக்ரனை மீது ரஷ்யா ஆரம்பித்த போர் 4ஆவது வாரமாக இன்றும் தொடர்கிறது. அந்நாட்டில் இருக்கும் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்ய ராணுவம் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
குறிப்பாகத் தலைநகர் கீவ், முக்கிய நகரங்களான கார்கிவ், மரியுபோல் நகரங்கள் மீது உக்ரைன் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாட்டு ராணுவங்கள் மட்டுமின்றி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பயங்கரம்.. 1000 பேர் தங்கியிருந்த தியேட்டரை குண்டு வீசி தகர்த்து.. அவர்கள் கதி? உக்கிரத்தில் உக்ரைன்
எதிர்பார்க்கவில்லை
சொல்லப்போனால் போர் இவ்வளவு நாட்கள் நீடிக்கும் என யாரும், குறிப்பாக புதின் நினைக்கவே இல்லை. உக்ரைன் ராணுவம் பெரியளவில் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கும் என்றும் அதிகபட்சம் ஓரிரு நாட்கள் மட்டுமே போர் நீடிக்கும் என்று தான் ரஷ்யா நினைத்தது. குறிப்பாக அதிபர் புதினுக்கும் இதுபோன்ற தகவல்களையே அந்நாட்டு உளவுத் துறை வழங்கி இருந்தது. ஆனால், களத்தில் நிலைமை அதற்கு நேர்மாறாக உள்ளது. பல இடங்களில் ரஷ்ய ராணுவத்தினரை முன்னேற விடாமல் உக்ரைன் ராணுவத்தினர் கடுமையாக எதிர்த்துப் போராடி வருகின்றனர்.
என்ன காரணம்
இது புதினுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ரஷ்யாவின் டாப் உளவு அதிகாரிகளை வீட்டுச் சிறையில் வைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்பட்டது. மேலும், ரஷ்யாவில் முக்கிய இடங்களில் அமெரிக்க உளவாளிகள் இருப்பதாகவும் அவர்கள் ரஷ்யாவின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து மேற்குலக நாடுகளுக்கு உடனடியாக தெரியப்படுத்துவதே போர் முடிவுக்கு வராமல் போகக் காரணம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
துரோகிகள்
இந்நிலையில், அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் ரகசியமாக வேலை பார்க்கும் துரோகிகளைக் களை எடுத்து ரஷ்யாவைச் சுத்தப்படுத்துவேன் என்று அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யாவை அழிக்க விரும்பும் மேற்குலக நாடுகளுக்கு இவர்கள் துணை போவதாகவும் கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக ரஷ்யச் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு புதின் அளித்துள்ள பேட்டியில், "எந்தவொரு நாட்டின் மக்களும், குறிப்பாக ரஷ்ய மக்கள், எப்போதும் தேசபக்தர்களைத் துரோகிகளிடமிருந்து பிரித்தெடுக்கும் திறமையைக் கொண்டு இருப்பவர்கள்.
தவிர்க்க முடியாது
நாட்டில் புகுந்து துரோக செயல்களில் ஈடுபடும் அவர்கள், மிக எளிதாகக் கண்டறியும் திறன் கொண்டவர்கள் ரஷ்யர்கள். துரோகிகளைச் சுத்தப்படுத்தும் இந்த நடவடிக்கை தவிர்க்க முடியாது. இது நமது நாட்டை, நமது ஒற்றுமை, எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் வலுமையையும் பலப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்" என்றும் அவர் தெரிவித்தார். புதினின் போட்டியை வைத்துப் பார்க்கும் போது, போருக்கு உள்நாட்டில் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க புதின் எதையோ பிளான் செய்து வருவது தெளிவாகத் தெரிவதாக விமர்சகர்கள் சாடியுள்ளனர்.
எதிர்ப்பு
கடந்த இரு நாட்களுக்கு முன்னர், ரஷ்யா செய்தி சேனல் நிகழ்ச்சிக்கு இடையே, பெண் ஒருவர் பேனர் உடன் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வந்திருந்திருந்தார். அந்த பேனரில் ரஷ்ய ஊடகங்கள் உங்களிடம் பொய் சொல்கின்றன என்று எழுதப்பட்டு இருந்தது. பொதுவாக ரஷ்யா நாட்டில் ஊடகங்களுக்கு இடையே இதுபோன்ற எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கைகளில் பொதுமக்கள் ஈடுபடுவது மிக அரிது. எனவே, இந்தச் சம்பவம் ரஷ்ய மக்கள் போருக்கு எந்தளவு எதிர்ப்பு தெரிவிக்கின்றன என்பதையே காட்டும் வகையில் இருப்பதாக மேற்குலக நாடுகள் தெரிவிக்கின்றன.
கடும் நடவடிக்கை
ஆனால், ரஷ்ய அதிபரும் ரஷ்ய அரசும் உள்நாட்டில் போருக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறது. ரஷ்ய ராணுவத்திற்கு எதிராகத் தவறான நடவடிக்கை எடுக்கும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் சட்டம் அங்கே கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல போர் குறித்து ரஷ்ய அரசு தரும் தகவல்களைத் தாண்டி எதையும் வெளியிடக் கூடாது என்றும் ரஷ்ய ஊடகங்களுக்கு நெருக்கடி தரப்படுவதாகக் கூறப்படுகிறது.