ஐயப்பனை தரிசிக்க ஒரே நாளில் குவிந்த 1 லட்சம் பக்தர்கள்..கண் குளிர தரிசித்த சேகர்பாபு
திருவனந்தபுரம்: சபரிமலையில் நேற்று தொடங்கிய பக்தர்கள் வருகை இன்றும் தொடர்ந்து நீடிக்கிறது. நேற்று 10 மணி நேரத்திற்கு மேலும், இன்று 12 மணிநேரத்திற்கு அதிகமாகவும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். அமைச்சர் சேகர்பாபு இருமுடி கட்டி வந்து கண் குளிர சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜைக்கு இன்னும் 18 நாட்களே உள்ளன. இதனால் கடந்த சில தினங்களாக சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் இரண்டே கால் லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர்.
சபரிமலைக்கு வந்த தமிழக அமைச்சர் சேகர் பாபு தனது மனைவியுடன் தீபாராதனை வேளையில் சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்தார்.
இந்த சீசனில் சபரிமலை தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், நிலக்கல், பம்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முன்பதிவு செய்யாமல் வருபவர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி நேற்று மட்டும் சுமார் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். தொடர்ந்து நேற்றும், இன்றும் சபரிமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் வெள்ளமாகவே காட்சி அளித்தது. நேற்று பக்தர்கள் 10 மணி நேரத்திற்கும் அதிகமாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இதற்கிடையே இன்று இதுவரை சுமார் 1 லட்சத்து 8 ஆயிரம் பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்து உள்ளனர். இந்த மண்டல சீசனில் இதுதான் மிகவும் அதிகபட்சமான எண்ணிக்கையாகும். இதனால் இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறந்தபோது பக்தர்களின் வரிசை 2 கிமீ தூரத்தையும் தாண்டி காணப்பட்டது.
இன்று 18ம் படி ஏறுவதற்காக பக்தர்கள் 12 மணிநேரத்திற்கும் அதிகமாக வரிசையில் காத்திருந்தனர். இன்று காலை நடை திறந்த ஒரு மணி நேரத்திலேயே சுமார் 16 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் 2 நாட்களிலும் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் டிசம்பர் 12ம் தேதி முன்பதிவு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. 1 லட்சத்து 3 ஆயிரத்து, 716 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால், வரும் நாட்களில் கூட்டம் மேலும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சன்னிதானத்தில் இவ்வாண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும் தரிசனம் செய்யவும், பக்தர்களுக்கு வழிபாடுகள் செய்யவும் சிரமம் ஏற்படாமல் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலம் நடைபெற்று வருகிறது. தினசரியும் 1லட்சத்து 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். பதினெட்டாம் படியேறும் போது பக்தர்கள் நெல் நிரப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நெல் நிரப்புவதற்கு காணிக்கையாக 200 ரூபாய் பெறப்படுகிறது.
சராசரியாக 500 பக்தர்கள் காணிக்கை செலுத்தி நெல் நிரப்பி வருகின்றனர். இதன் மூலம் தினசரியும் 18 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.












Click it and Unblock the Notifications