தீப திருவிழா காண வரும் பக்தர்களுக்கு குட் நியூஸ்..திருவண்ணாமலைக்கு 2700 சிறப்பு பஸ்கள் இயக்கம்
திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவை காண திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்கு டிசம்பர் 6ஆம் தேதி மகாதீபம், பவுர்ணமி நாட்களில் 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துறை அறிவித்துள்ளது. அன்னதானம் விநியோகம் செய்ய விரும்புவோர் நவம்பர் 26 ஆம் தேதிக்குள்ளாக foscos.fssai.gov.inஎன்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவோ அல்லது உணவு கட்டுப்பாடு துறை அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மகாதீபத் திருவிழா 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 6 தேதியன்று காலையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்று மாலை 2,668 அடி உயரமுள்ள மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலில் மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு நாளை துர்கையம்மன் உற்சவமும், நாளை மறுநாள் பிடாரியம்மன் உற்சவமும், விநாயகர் உற்சவமும் நடைபெறுகிறது.

தீப திருவிழா கொடியேற்றம்
நவம்பர் 27ஆம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிராகாரத்தில் உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவில் ஆறாம் நாளன்று வெள்ளித் தேரோட்டமும், ஏழாம் நாளன்று மகா தேரோட்டமும் நடைபெறவுள்ளது.

மகா தீப திருவிழா
டிசம்பர் 6 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர அண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றப்படும். அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு கோவில் கோபுரங்கள் தூய்மைபடுத்தப்பட்டுள்ளன. கோபுரங்களில் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு ஜொலிக்கின்றன.

பல லட்சம் பக்தர்கள்
திருவண்ணாமலை தீப திருவிழாவை காண இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும் இந்து சமய அறநிலையத்துறையும் செய்து வருகிறது. பக்தர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், கழிப்பிடம், உணவு போன்றவற்றிக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

2700 சிறப்பு பேருந்துகள்
மகாதீப பெருவிழா நடைபெறும் டிசம்பர் 6ஆம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் திருவண்ணாமலைக்கு வருவது வழக்கம். அதனால் பொதுமக்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2700 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது.

மகா தேரோட்டம்
மகா தேரோட்டத்தின் போது 5 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் எனவும் டிசம்பர் 6ஆம் தேதி மட்டும் 25 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 7ம் தேதி பொளர்ணமியும் உள்ளது. அதனால் போக்குவரத்துறை 2700 சிறப்பு பேருந்துகளை டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இயக்க திட்டமிட்டுள்ளது. மேலும் பொதுமக்களின் வருகையை பொறுத்து பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
அன்னதானம் அளிக்க விரும்புவோர் மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கும் இடங்கள் மற்றும் சொந்த இடங்களில் மட்டுமே அன்னதானம் செய்ய வேண்டும். திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கும் இடங்கள் மற்றும் சொந்த இடங்களில் அன்னதானம் விநியோகம் செய்ய விரும்புவோர் நவம்பர் 26 ஆம் தேதிக்குள்ளாக foscos.fssai.gov.inஎன்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவோ அல்லது உணவு கட்டுப்பாடு துறை அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் உத்தரவு
நவம்பர் 26 ஆம் தேதிக்கு பிறகு அன்னதானம் செய்ய விரும்புவோருக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். நேரில் விண்ணப்பிக்க நியமன அலுவலர் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை செங்கம் ரோடு, திருவண்ணாமலை அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். அனுமதி பெறாமல் அன்னதானம் செய்தால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications