கார்த்திகை அமாவாசை..கிணற்றில் பொங்கிய கங்கையில் புனித நீராடல்..கும்பகோணம் அருகே பரவசம்
கும்பகோணம்: கார்த்திகை அமாவாசை தினத்தில் கும்பகோணம் அருகே திருவிசநல்லூரில் உள்ள ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கங்கை நீர் பொங்கி வரும் என்பது ஐதீகம். இன்றைக்கும் இந்த விசேஷ கிணற்றில் ஆயிரக்கணக்கானோர் பக்தி சிரத்தையுடன் நீண்ட வரிசையில் நின்று புனித நீராடினர்.
கும்பகோணம் அருகே திருவிசநல்லூரில் உள்ள ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில், ஆண்டு தோறும் கார்த்திகை அமாவாசை தினத்தில் மட்டும் கங்கைநீர் பொங்கி வரும் என்பது ஐதீகம். விசேஷ கிணற்றில் இருந்து நான்கு புறங்களில் இருந்தும் தன்னார்வலர்கள் வாளிகளில் நீர் இறைத்து ஊற்ற, ஆயிரக்கணக்கானோர் பக்தி சிரத்தையுடன் நீண்ட வரிசையில் வந்து அதிகாலை முதல் புனித நீராடினர்.
கும்பகோணம் அருகேயுள்ள திருவிசநல்லூர் கிராமம், ஸ்ரீ பகவந்நாம போதேந்த்திர சுவாமிகள், ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள், ஸ்ரீதர அய்யாவாள் சுவாமிகள் ஆகியோர் சாஸ்திரங்கள், வேதங்கள் குறித்து விவாதித்த தலம். இத்தலத்தில் தான் மகான் மருதாநல்லூர் ஸ்ரீ ஸத்குரு சுவாமிகள் அவதரித்தார்.
இங்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் மகான் ஸ்ரீதர அய்யாவாள் வாழ்ந்த காலத்தில் ஒரு கார்த்திகை அமாவாசை தினத்தில் அவரது தந்தைக்கு திதி கொடுக்க ஏற்பாடு நடந்து வந்தது இந்நிலையில் இல்லத்தின் வாசலில் ஏழை பிற சாதிக்காரர் ஒருவர் பசியால் துடித்தது காண பொறுக்க முடியாமல், திதிக்காக ஏற்பாடு செய்த உணவில் ஒரு பகுதியை அவருக்கு அளித்து விட்டார்.
இதை கண்ட திதிக்காக வந்த சாஸ்திரிகள் திதி கொடுக்கும் முன்பே அதற்காக தயாரித்த உணவை பிறருக்கு அளித்து விட்டதால் தோஷம் ஏற்பட்டுள்ளது இதனை போக்க வேண்டுமானால் நீ காசியில் போய் நீராடி வந்த பின்னரே திதி கொடுக்க இயலும் என கூறி சென்று விட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அய்யாவாள் காசி சென்று வர பல மாதங்கள் ஆகுமே அதுவரை திதி கொடுக்காமல் இருக்க முடியாதே என மனம் வருந்தினார் மேலும் சிவ பக்தரான அவர், கங்காஷ்டகம் எனும் ஸ்தோஸ்திரத்தை வாசிக்க, அவரது வீட்டு கிணற்றில் கங்கை பிரவாகமாக பொங்கி திருவிசநல்லூர் கிராமமே வெள்ளக்காடானது
இதனால் அய்யாவாளின் பெருமையை ஊர்மக்கள் உணர்ந்ததுடன், கங்கை வெள்ளத்தில் இருந்து இவ்ஊரையும் தங்களையும் காப்பாற்றிட அவரை வேண்டிக்கொண்டனர் இதையடுத்து அய்யாவாள் கங்கையை தன் வீட்டு கிணற்றிலேயே தங்கிட மீண்டும் பிராத்தனை செய்தார் இதனையடுத்து, இதனால் வெள்ளத்தின் சீற்றம் தணிந்து ஊர் மீண்டும் இயல்பு நிலைக்கு திருப்பியது.
இத்தகைய சிறப்பு பெற்ற ஸ்ரீதர அய்யாவாளின் பெருமையை உலகுக்கு உணர்த்திய தினமான கார்த்திகை அமாவாசை தினத்தில் மட்டும் ஆண்டு தோறும் இங்குள்ள கிணற்றில் கங்கை நீர் பிரவாகமாக பொங்கி வருவது வழக்கம்.
அதுபோல இந்த ஆண்டும் கார்த்திகை அமாவாசை தினமான இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் முதலில் காவிரியில் புனித நீராடி, காவிரி கரையில் முன்னோர்களை வேண்டி இலை போட்டு, அரிசி காய்கறிகள், பழங்கள், தேங்காய் மலர்கள் வைத்து பிராத்தனை செய்த பின்னர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்திற்கு நீண்ட வரிசையில் சென்று, விசேஷமிக்க கிணற்றில் இருந்து பொங்கும் கங்கை நீரில் நீராடினர். கிணற்றில் இருந்து நீரை ஏராளமான தன்னார்வர்கள் நான்குபுறமும் வாளிகளில் இறைத்து ஊற்ற, அதில் தொடர்ந்து புனித நீராடினர்.
இந்நிகழ்ச்சியையொட்டி ஸ்ரீதர அய்யாவாள் சுவாமிகள் விக்ரகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அதற்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. திருவிடைமருதூர் உட்கோட்ட போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் என பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.