சபரிமலைக்கு விமானத்தில் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்..இருமுடி பையை கொண்டு போக அனுமதி
விமானத்தில் சபரிமலை செல்லும் பக்தர்கள் தங்களுடன் தேங்காயை எடுத்துச் செல்ல சிவில் விமான பாதுகாப்புப் பிரிவு அனுமதி அளித்துள்ளது. இது 2023ஆம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதுவரை 4 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
சபரிமலை யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்கள் தங்களின் தலையில் இருமுடி ஏந்திச் செல்வது வழக்கம். அந்த இருமுடி பையில், நெய் நிரப்பப்பட்ட தேங்காய் மற்றும் வழியில் உள்ள புனித இடங்களில் உடைப்பதற்கான சாதாரண தேங்காய்கள், இதர காணிக்கை பொருட்கள் ஆகியவை இருக்கும். ஆனால், எளிதில் தீப்பிடிக்கக் கூடியது என்ற அடிப்படையில், விமானத்தில் தேங்காய் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. இதனால், ஐயப்ப பக்தர்கள் விமான பயணத்தை தவிர்க்க வேண்டிய நிலை இருந்தது.
சபரிமலை ஐயப்பனை காண குவியும் பக்தர்கள்.. தரிசன நேரத்தில் இன்று முதல் மாற்றம் - முழு விபரம்
விமான பயணம்
விமானத்தில் பயணம் மேற்கொள்ளும்போது, எளிதில் தீப்பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் தேங்காயை தங்களுடன் பயணிகள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக, சரக்குப் பகுதியில் வைத்து எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். இந்நிலையில், மண்டல-மகர விளக்கு பூஜையையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக இருமுடியை தங்களுடனேயே எடுத்துச் செல்ல சிவில் விமான பாதுகாப்புப் பிரிவு அனுமதி அளித்துள்ளது. இதற்காக, பாதுகாப்பு விதிமுறைகளில் குறுகிய காலத்துக்கு தளர்வுகளை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 20 வரை அமல்
எனினும், எக்ஸ்-ரே, இடிடி (வெடிகுண்டு சோதனை கருவி),உடல் பரிசோதனை ஆகியவற்றை பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய பிறகே பக்தர்கள் தங்களது இருமுடியை விமானங்களில் உடன் கொண்டு செல்ல முடியும். சபரிமலை சீசன் முடிவடையும் ஜனவரி இறுதிவரை இந்த தளர்வுகளை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய விதிமுறைகளின் படி, தேங்காய் எரியும் தன்மைகொண்டது என்பதால் விமானங்களில் அதனை எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மணி கண்டன்
சிவனுக்கும் மோகினி ரூபமான விஷ்ணுவுக்கும் மகனாக அவதரித்தவர் ஐயப்பன். பம்பா நதிக்கரையில் பந்தள அரசன் ராஜசேகரனால் கண்டெடுக்கப்பட்டார். பிள்ளை இல்லாத தனக்கு கடவுளாக கொடுத்த பிள்ளை என்று மகிழ்ந்தார் பந்தள மன்னன். கழுத்தில் மணியோடு பிறந்தவருக்கு மணிகண்டன் என்று பெயர்சூட்டி வளர்த்தார் பந்தள மன்னன். சபரிமலை ஐயப்பன் சிவன் விஷ்ணுவின் அம்சம்தான். இதனை அனைவரும் உணரும் வகையிலேயே முக்கண் கொண்ட சிவ அம்சமான தேங்காயில் விஷ்ணுவின் அம்சமான பசு நெய் ஊற்றி எடுத்துச்செல்கின்றனர்.
புலிப்பால்
மணிகண்டன் வந்த நேரம் செல்வ செழிப்பு அதிகரித்தது, பந்தள ராணிக்கும் குழந்தை பிறந்தது. நாட்கள் செல்லச் செல்ல விதி அரசி ரூபத்தில் விளையாடியது. பந்தள மன்னனின் மனைவி வயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய்யாக கூறி நடித்தாள். அரசவை வைத்தியரை கைக்குள் போட்டுக்கொண்டு வயிறு வலிக்கு புலிப்பால் குடித்தால் மட்டுமே நோய் தீரும் எனக் கூற வைத்தாள். தாய்க்கு புலிப்பால் கொண்டு வர வனத்திற்கு புறப்பட்டார் சிறுவனாக இருந்த மணிகண்டன்.
இருமுடி கட்டிய மன்னன்
தந்தையான பந்தள மன்னன் மிக வருத்தத்துடன் மகனை வழியனுப்பும் போது, காட்டில் உண்ண எடுத்துச் செல்லும் உணவுகள் பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க நெய்யில் தயாரித்த சில உணவு வகைகளை ஒரு முடியாகக் கட்டினார். அதேசமயம், சிவபக்தனான பந்தள மன்னன், முக்கண்ணனான சிவனின் அம்சம் போல் ஒரு தேங்காயை மற்றொரு முடியில் கட்டிக் கொடுத்தார். இருமுடிகளையும் ஏந்திய சிறுவன் மணிகண்டன், புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்றான்.
தலையில் சுமந்த ஐயப்பன்
இருமுடியை முதன்முதலில் தலையில் ஏற்றியது ஐயப்பன் என்று புராணம் கூறுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனைக் காண பந்தள மன்னன் செல்லும்போது ஐயப்பனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்வார். நெய்யில் செய்த பலகாரங்களைக் கொண்டு செல்வார். நெய்யை தேங்காய்க்குள் ஊற்றிக்கொண்டு சென்றால் இன்னும் பல நாள் கெடாமல் இருக்கும்.
நெய்யபிஷேக பிரியன் ஐயப்பன்
பந்தள மன்னன், ஐயப்பனை காண நடந்தே மலை ஏறுவார். மலையை அடைய பல நாட்களாகும். எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது. இதனை நினைவு படுத்தும் வகையிலேயே சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் இருமுடிகட்டி செல்லும் போது நெய் தேங்காய் கொண்டு செல்வது முக்கியமான ஒன்றாகிவிட்டது. நெய் தேங்காய் கொண்டு போய் அந்த நெய்யை ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்து விட்டு அதை பிரசாதமாக வீட்டிற்குக் கொண்டு செல்கின்றனர்.