குருவார விரதம்..வியாழக்கிழமை இதை செய்தால் கெட்டி மேளச்சத்தம் கேட்கும்..மழலை தவழ்ந்து விளையாடும்
வியாழக்கிழமைகளில் குரு பகவானை நினைத்து மேற்கொள்ளும் விரதம் குரு வார விரதம் ஆகும். இந்த விரதம் இருந்தால் திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சென்னை: குரு பகவானுக்கு உகந்த நாள் வியாழக்கிழமை. வியாழக்கிழமைகளில் குரு பகவானை நினைத்து மேற்கொள்ளும் விரதம் குரு வார விரதம் ஆகும். இந்த விரதம் இருப்பவர்கள் மஞ்சள் ஆடை அணிந்து குருவை வழிபட்டால் மற்ற கிரக தோஷங்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர்பதவி கிடைக்கும். செல்வச்செழிப்பு மேலோங்கும். சுக வாழ்வு, மன நிம்மதி கிடைக்கும். அறிவு விருத்தியடையும்.
வியாழன் அன்று குங்குமம், மஞ்சள் சந்தனம் அல்லது மஞ்சள் தானம் செய்யவும். அதோடு நெற்றியில் மஞ்சள், சந்தனம் வைத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளவும். இதன் காரணமாக ஜாதகத்தில் வியாழன் வலுப்பெற்று சுப பலன்களைத் தரத் தொடங்குகிறார்.
திருமண வயது வந்தும் சிலருக்கு திருமணம் முடிவாகாமல் தாமதப்படலாம். 'வாழ்க்கைத் துணை அமையவில்லையே, வயதாகிக் கொண்டே போகின்றது, வரன் ஏதும் பொருத்தமானதாக வரவில்லையே' என்று கவலைப்படுபவர்கள், வியாழன் அன்று விரதம் இருந்து வாழைக்கு நீர் ஊற்றவும். இதனால் திருமணத் தடைகள் நீங்கும்.
வியாழக்கிழமை பரிகாரம்
திருமணமானவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால், அவர்களின் திருமண வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. விரைவில் புத்திரபாக்கியம் கிடைக்கும். பகவான் சத்தியநாராயணனரின் கதையைக் படிக்கவோ,கேட்கவோ செய்தால் குடும்பம் வாழையடி வாழையாக தழைக்கும்.
திருமண விரதம்
குரு பலம் கூடி வந்தால்தான் திருமணம் முடியும். எனவே, குருவிற்குரிய சிறப்பு தலங்களுக்குச் சென்றும் வழிபட்டு வரலாம். வியாழன் தோஷம் நீங்க, வியாழன் அன்று குளிக்கும் நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்துக் குளிக்கவும். மேலும், குளிக்கும் போது, 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என்ற மந்திரத்தை உச்சரிக்கவும். குளித்து விட்டு வியாழன் அன்று மஞ்சள் நிற ஆடைகளை அணியவும்.
திருமணம் கை கூடி வரும்
குளிக்கும் முன்பு மஞ்சள் தூள் ஒரே ஒரு குங்குமப்பூ போட்டு குளிக்கலாம் நன்மைகள் நடக்கும். ஆண்களுக்கு குங்குமப்பூ மட்டும் போடுங்கள் மஞ்சள், சந்தனம், குங்குமப்பூ சேர்த்த திலகம் வைக்க திருமணம் கை கூடி வரும். இந்த பரிகாரம் 11 வாரங்களுக்கு வியாழக்கிழமை தோறும் அதிகாலையில் செய்ய வேண்டும். இப்படி குளித்து வர விரைவில் திருமணமாகும். திருமணத்திற்கு வரன் பார்க்க வரும் போது மஞ்சள்,சந்தன நிறத்தில் புதிய துணி போடுங்கள் தோஷங்கள் நீங்கி திருமணம் கை கூடி வரும்.
குரு அம்சம் தரும் நாட்கள்
ஆங்கில தேதிகளான 3, 12, 21, 30 ஆகியவற்றிலும், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களிலும் தனுசு, மீன ராசிகளிலும் வியாழக்கிழமைகளில் பிறந்தவர்கள் குருவின் குரு அம்சத்தை பிறவியிலேயே பெற்றவர்கள் ஆவார்கள். வியாழக்கிழமை விரதம் எனப்படும் குரு வார வழிபாட்டை கடைப்பிடிப்பதால் குரு பகவானின் சக்தியால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றிபெறுவார்கள்.
குருதோஷம் நிவர்த்தியாகும்
ஜாதகத்தில் குரு கெட்டிருந்தாலோ, குரூரமானவராக இருந்தாலோ, வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து, குரு பகவானை பூஜிக்க வேண்டியது அவசியம். அப்படிச் செய்தால் நல்ல பலன் ஏற்படும். குருவார விரத வழிபாட்டை வளர்பிறை வியாழக்கிழமையில் தொடங்கி செய்வது சிறப்பானது. மஞ்சள் நிற உடைகளை அணிவதாலும், புஷ்பராக மணியை தரிப்பதாலும், மஞ்சள் நிற வஸ்திர தானம் செய்வதாலும், கொண்டைக்கடலை தானியத்தை தானம் கொடுப்பதாலும், குருவார விரதம் இருப்பதாலும் குருதோஷம் நிவர்த்தியாகும்.
செல்வ வளம் தரும் குபேர பூஜை
வியாழக்கிழமையன்று குபேரனுக்கு ஏற்ற பூஜை செய்தாலும் செல்வ வளம் பெருகும். நீங்கள் தரையில் விரிப்பில் சம்மணம் போட்டு அமர்ந்து கொள்ளலாம். முதலில் குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு, "ஓம் நமோ நமசிவாய சர்வ குபேர வசி வசி வசி ஓம்" என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
கடன் கொடுக்காதீர்கள்
வியாழன் அன்று யாருக்கும் கடன் கொடுக்கவோ, யாரிடமும் கடன் வாங்கவோ கூடாது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். இதன் காரணமாக, ஜாதகத்தில் வியாழன் பலவீனமாகி பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். தானம் இல்லாமல் எந்த விரதமும் சடங்கும் நிறைவடையாது. வியாழன் அன்று உங்கள் சக்திக்கு ஏற்ப மஞ்சள் நிறத்தில் உள்ள பருப்பு, பழங்கள் போன்றவற்றை பிராமணர்களுக்கு தானம் செய்யுங்கள்.