விளக்கே..திருவிளக்கே..திருக்கார்த்திகையில் ஒளிரும் சுடர் விளக்கே..எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
சென்னை: கார்த்திகை தீபத்திருவிழா இன்று தமிழகம் எங்கும் கொண்டாடப்படுகிறது. தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. நமது வீட்டில் 27 விளக்குகள் ஏற்றுவது ஐதீகம். 27 விளக்குகள் ஏற்றினால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். கார்த்திகை தீபத்திருவிழா நாளில் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் நமது வீட்டில் இன்று 27 தீபங்களை ஏற்ற வேண்டும். 27 தீபங்கள் ஏற்ற முடியாதவர்கள் குறைந்தபட்சம் 9 தீபங்களாவது ஏற்ற வேண்டும்.
கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு நாம் செய்யும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற முடியாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக வீட்டின் வெளியிலும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
திருவண்ணாமலையில் மலை மீது மகா தீபம் ஏற்றிய உடன் அனைவரின் இல்லங்களிலும் தீபங்களை ஏற்றலாம். இன்றைய தினம் தீபம் ஏற்றி வழிபடுங்கள் நம் இல்லங்களில் மட்டுமல்ல உள்ளங்களிலும் மகாலட்சுமி குடியேறுவாள். செல்வ வளம் பெருகும் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையானே! ஆவணி மாத பவுர்ணமி கிரிவலத்திற்கு குவியும் பக்தர்கள்!
முப்பெரும் தேவியரின் அருள்
திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வ சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றார். நம் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தெய்வ சக்தி அதிகரிக்கும். வீட்டை தூய்மை படுத்தி விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம். தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம்.
கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம் அன்று ஏற்றக்கூடிய அகல் விளக்குகள் புத்தம் புதியதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே நீங்கள் ஏற்றிய விளக்குகளை சுத்தம் செய்து நன்கு வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தலைவாசலில் ஏற்றக்கூடிய இரண்டு விளக்குகள் மட்டும் புதிதாக இருப்பது மிகவும் நல்லது. மற்ற விளக்குகள் பழையதாக இருக்கலாம் தவறில்லை. விரிசல் இல்லாமல், உடையாத நல்ல அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுவது முறையாகும்.
தீப ஒளியின் வெளிச்சம்
அகல் விளக்குகளை மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரித்துக் கொண்டு பஞ்சு திரி போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தி நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தீபத்திலிருந்து மற்ற தீபங்களை ஏற்றுவது தான் கார்த்திகை தீபத்தின் சிறப்பம்சம். பெரிய அகல் விளக்கில் முதலில் ஒரு தீபத்தில் தீக்குச்சியால் ஏற்றி வைத்து விட்டு பின்னர் மற்ற தீபங்களை அந்த முதல் தீபத்தில் ஒளிரும் ஜோதியில் இருந்து ஏற்றி வர வேண்டும். இதன் மூலம் நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் தீபத்தில் ஒளி பரவி நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கச் செய்யும்.
எங்கெங்கு விளக்கேற்றலாம்
தலைவாசலில் புதிய அகல் விளக்குகள் கொண்டு தீபமேற்ற வேண்டும். பின்னர் மறந்து விடாமல் சமையலறையிலும் விளக்கேற்றுவது அவசியம். சமையல் அறையில் நிச்சயம் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பால்கனி, வராண்டா, மாடிப்படிகளில் கோலம் போட்டு தீபம் ஏற்றலாம். துளசி செடிக்கு ஏற்றுங்கள். நெல்லி, மாதுளை இருந்தால் நிச்சயம் ஏற்றி வைக்க வேண்டும் இந்த மரங்கள் மகாலக்ஷ்மி அம்சம் கொண்டவை.
அதிகாலை அந்தி மாலை
தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது நம்பிக்கை. அதோடு வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள். தீபம் ஏற்றிய பின்னர் ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும் என்பதும் ஐதீகம்.
என்னென்ன நன்மைகள்
மண்ணால் செய்யப்பட்ட விளக்கு ஏற்றினால் பீடை விலகும். வெள்ளி விளக்கு ஏற்ற திருமகள் அருள் கிடைக்கும். பஞ்ச லோக விளக்கு ஏற்ற தேவதை வசியம் உண்டாகும். வெண்கல விளக்கு ஏற்ற ஆரோக்கியம் உண்டாகும். இரும்பு விளக்கு ஏற்ற சனி கிரக தோஷம் விலகும். நெய் கொண்டு தீபம் ஏற்றினால் செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும். நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் அதிகரிக்கும். தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றினால் வசீகரம் கூடும். இலுப்பை எண்ணெய்யில் தீபம் ஏற்ற சகல காரிய வெற்றி கிடைக்கும். விளக்கெண்ணெயில் தீபம் ஏற்ற புகழ் அதிகரிக்கும். கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே அதிகரிக்கும்.
மகாலட்சுமி குடியேற விளக்கேற்றுங்கள்
நேற்று பரணி தீபம் எல்லோர் வீட்டிலும் ஏற்றியிருப்பீர்கள். இன்றைய தினம் கார்த்திகை நாளை மறுநாள் ரோகிணி எனவே புதன்கிழமை வரைக்கும் நாம் தீபம் ஏற்ற வேண்டும். நம்முடைய வீட்டில் எங்கும் இருளே இல்லாதபடி நிறைய அகல் விளக்குகளை ஏற்றுங்கள். வீட்டில் இருக்கும் அனைத்து வாசல்களிலும் தீபம் ஏற்ற வேண்டும். தீபத்திருநாளில் தீபம் ஏற்றி வழிபட நம் இல்லத்தில் அன்னை மகாலட்சுமி குடியேறுவாள் என்பது நிச்சயம்.