சபரிமலை ஐயப்பன் கோவில் அரவணை பாயாசத்தில் தரம் குறைந்த ஏலக்காய்..ஆய்வில் அம்பலம்
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு தரப்படும் அரவணை பாயாசத்தில் தரமற்ற ஏலக்காய் பயன்படுத்தியது ஆய்வில் அம்பலமாகியுள்ளது. அரவணை பாயாசத்தில் உள்ள ஏலக்காயில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப் பூச்சிமருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்டதைவிட அதிகப் பூச்சி மருந்து கொண்ட ஏலக்காய் அரவணை பாயாசத்தில் பயன்படுத்தியது திருவனந்தபுரத்தில் உள்ள உணவுப் பொருள் ஆய்வகத்தில் நடைபெற்ற ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழங்கப்படும் பிரசாதங்களில் அரவணை பாயாசம் முக்கியமானது. மகர விளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பக்தர்கள் இருமுடி சுமந்து வந்து ஐயப்பனை வழிபட்டு வருகின்றனர். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அரவணைப் பாயாசத்தை தங்களின் வீடுகளுக்கு வாங்கிச் செல்கின்றனர்.
இதனிடயே சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஏலக்காய் டெண்டர் நிராகரிக்கப்பட்ட ஏலக்காய் நிறுவன உரிமையாளர் பிரகாஷ் என்பவர், கொள்முதல் செய்த ஏலக்காயின் தரம் பற்றி ஐயம் எழுப்பி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அரவணை பாயாசத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, திருவனந்தபுரத்தில் உள்ள உணவுப் பொருள் ஆய்வகத்தில் அரவணை பாயாசம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
அச்சமயம் அனுமதிக்கப்பட்டதை விட அதிக பூச்சி மருந்து கொண்ட ஏலக்காய் அரவணை பாயாசத்தில் பயன்படுத்தியது ஆய்வில் தெரியவந்தது. தொடர்ந்து திருவனந்தபுரம் ஆய்வகத்தின் அறிக்கை கேரள உயர்நீதிமன்றத்தின் தேசவம் போர்டு அமர்வில் தாக்கல் செய்யப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்ததால் கூடுதலாக அரவணை பாயாசம் தேவைப்பட்டது. எனவே அரவணை பாயாசத்தில் பயன்படுத்துவதற்கான ஏலக்காயை உள்ளூர் சந்தையிலேயே தேவசம் போர்டு கொள்முதல் செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2021ஆம் ஆண்டு கொச்சியைச் சேர்ந்த எஸ்ஜேஆர் குமார் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கேரளாவின் புகழ்பெற்ற, பாரம்பரியம் கொண்ட சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசாதம், நிவேத்தியம் தயாரிக்க வேறு மதத்தினர் பின்பற்றப்படும் முறையில் ஹலால் சான்று வழங்கப்பட்ட சர்க்கரை பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அவ்வாறு பயன்படுத்துவது, இந்து மதத்தின் பாரம்பரியம், கோயிலின் மரபுகள், ஆகமங்கள் ஆகியவற்றுக்கு விரோதமானதாகும்.
அரவணைப் பாயாசம், உன்னி அப்பம் ஆகியவை சபரிமலை ஐயப்பனுக்கு மட்டும் படைக்கப்படும் நைவேத்தியம். அந்த நைவேத்தியம் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. நைவேத்தியம் தயார் செய்யப்படும்போது, சுத்தமான பொருட்களைக் கொண்டும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவது அவசியம். தெய்வத்தின் விருப்பத்தின்படி பிரசாதம், நைவேத்தியம் செய்யப்பட்டால் மட்டுமே பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் தெய்வத்தின் அருளுடன் இருக்கும்.
ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்கள் என்பது வேறு மதத்தினர் நம்பிக்கையின் அடிப்படையில் பயன்படுத்தப்படும் பொருட்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 3-வது பிரிவின்படி, கோயில் நிர்வாகத்தின்படி, இந்தச் செயல்கள் முற்றிலும் விரோதமானவை, விதிமுறைகளை மீறியவை எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், பிஜி.அஜித் குமார் ஆகியோர் அமர்வில் கடந்த 2021ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, கேரள அரசு மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் விளக்கம் அளிக்கவும், சபரிமலை சிறப்பு ஆணையர் எம்.மனோஜ் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டது. இதனிடையே இதுபோன்ற தவறான செய்திகளுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் கடுமையாக கண்டனம் தெரிவித்தது.
திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில், அரவணை பாயாசத்தில் பயன்படுத்தப்படும் சர்க்கரை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. உண்மைக்கு மாறான தகவல்கள் அடங்கியுள்ளன. சில ஊடகங்களிலும், ஆன்லைன் தளங்களிலும் தவறான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற தகவல்களைப் பரப்புவோர் மீது தேவஸ்தானம் தகவல் தொழில்நுட்பச் சட்டப்படி சட்ட நடவடிக்கை எடுக்கும், அவதூறு வழக்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சபரிமலை நிர்வாக அதிகாரி சன்னிதானம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து, குறிப்பிட்ட இணையதளத்துக்கு எதிராகவும், சில ஊடகங்களுக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்யக் கோரியுள்ளார் எனத் தெரிவித்தது.
இதனிடையே இந்த ஆண்டு அரவணை பாயாசத்தில் அதிக பூச்சிக்கொல்லி மருந்துகள் கொண்ட தரமற்ற ஏலக்காய் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.