புண்ணியம் தரும் புரட்டாசி..ஏழுமலையானை தரிசிக்க குவிந்த பக்தர்கள்..நாளை 6 மணி நேரம் தரிசனம் ரத்து
திருப்பதி: புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நாளை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவதால் காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான அனுமதி ரத்து செய்யப்பட உள்ளது.
இந்தியாவின் பணக்கார கடவுள் திருமலையில் வாசம் செய்யும் ஸ்ரீனிவாசப்பெருமாள். ஏழுமலையான் என்று பக்தர்களால் அழைக்கப்படும் பெருமாளை புரட்டாசியில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் விரும்புவார்கள்.
திருப்பதிக்கு சென்று வந்தாலே திருப்பம் வந்து விடும் என்ற நம்பிக்கை பலருக்கும் உள்ளது. எனவேதான் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர்.

புரட்டாசி மாத பிறப்பு
ஏழுமலையானுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் நேற்று பிறந்துள்ளது. புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தால் புண்ணியம் தரும்.நினைத்த காரியம் நிறைவேறும். ஏழுமலையானின் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் இருப்பது வழக்கம். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த ஏழுமலையான் பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் ஒரு தடவையாவது சாமியை தரிசனம் செய்ய வேண்டும் என எண்ணுகின்றனர்.

பிரம்மோற்சவ விழா
அதனால் நடைபாதையாகவும், வாகனங்கள் மூலமாகவும் திருப்பதிக்கு வருகின்றனர். மேலும் வரும் 27 ஆம்தேதி தொடங்கி அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. குறிப்பாக ஏழுமலையானுக்கு உகந்த 3ஆம் சனிக்கிழமை அன்று இந்த ஆண்டு தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் மாட வீதிகளில் உலா வந்து மக்களுக்கு காட்சி தர உள்ளது மிகவும் சிறப்பு ஆகும்.

குவியும் பக்தர்கள்
ஏற்கனவே கடந்த சில மாதங்களாக வார இறுதி நாட்களான வெள்ளி ,சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இன்று புரட்டாசி மாதம் பிறந்ததால் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் திருமலை முழுவதும் பக்தர்கள் குவிந்து இருந்தனர்.

நீண்ட நேரம் காத்திருப்பு
இதனால் வைகுந்தம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் நிரம்பினர். இலவச தரிசனத்திற்காக நீண்ட தூரம் பக்தர்கள் வரிசையில் 30 மணி நேரத்திற்கு மேலாக காத்துக் கொண்டு உள்ளனர். திருப்பதியில் நேற்று 82,392 பேர் தரிசனம் செய்தனர். 41, 800 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.59 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.

ஆழ்வார் திருமஞ்சனம்
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. நாளை செவ்வாய்கிழமை காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் ஆலய சுத்தி வைபவம் நடைபெறும். அதைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு மேல் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.












Click it and Unblock the Notifications