திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க காத்திருக்க தேவையில்லை..தேவஸ்தானத்தின் சூப்பர் திட்டம் அறிமுகம்
திருப்பதி: ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பலமணிநேரம் ஓரே இடத்தில் காத்திருப்பதை தவிர்க்க நேர ஒதுக்கீடு செய்யும் சர்வதரிசன டிக்கெட் வழங்கும் திட்டம் செய்யப்பட உள்ளது. திருப்பதியில் தினமும் 20,000 டிக்கெட் தரப்பட்டு ஒதுக்கீடு செய்த நேரத்தில் திருமலை சென்று 2 மணி நேரத்தில் தரிசனம் செய்து கொள்ளலாம் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இந்தியாவிலேயே பணக்கார கடவுளாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறார் திருமலையில் வாசம் செய்யும் ஏழுமலையான். இந்தியா முழுவதிலும் இருந்தும் தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்து கொண்டிருக்கின்றனர்.
மாதந்தோறும் 100 கோடிக்கு மேல் உண்டியல் வருமானம் கிடைக்கிறது. முடி காணிக்கை, கோவில் தங்குமிடம், சிறப்பு தரிசனம் மூலமும் பலகோடி கோவிலுக்கு வருமானம் வந்து கொண்டிருக்கிறது.
தி.நகரில் அருள்பாலிக்க வரும் திருச்சானூர் பத்மாவதி தாயார்.. ஆலய கும்பாபிஷகம் எப்போது தெரியுமா?
சொத்துக்கள் எவ்வளவு
திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ரூ.85,705 கோடி மதிப்புள்ள 960 சொத்துக்கள் உள்ளது. திருமலை தேவஸ்தான அரங்காவலர் குழு கூட்டத்துக்கு தேவஸ்தானத்துக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்து இன்று வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளனர்.
புது விடுதி கட்ட முடிவு
திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதை ஒட்டி கூடுதலாக 10,000 பேர் தங்க விடுதி கட்ட ரூ.95 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த சோதனை முறையில் பிரமோற்சவம் , புரட்டாசி முடிந்து பல மாற்றங்களை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வ தரிசன டோக்கன்
ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நாள் கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. பலமணிநேரம் பக்தர்கள் ஓரே இடத்தில் காத்திருப்பதை தவிர்க்க நேர ஒதுக்கீடு செய்யும் சர்வதரிசன டிக்கெட் வழங்கும் திட்டம் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் தினமும் 20,000 டிக்கெட் தரப்பட்டு ஒதுக்கீடு செய்த நேரத்தில் திருமலை சென்று 2 மணி நேரத்தில் தரிசனம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.
பிரம்மோற்சவம்
ஏழுமலையானின் பிரம்மோற்சவ விழா இந்த ஆண்டு வரும் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, சுவாமிக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்க உள்ளார்.
கருடவாகன சேவை
9 நாட்கள் நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவில், அக்டோபர் மாதம் 1ஆம்தேதி இரவு 7 மணிக்கு கருட சேவை நடைபெற உள்ளது. புரட்டாசி சனிக்கிழமை என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும். அக்டோபர் 2ஆம் தேதி தங்க ரதத்தில் சுவாமி பவனி வர உள்ளார். 3ஆம் தேதி காலை தேர்த் திருவிழாவும், 4ஆம் தேதி சக்கர ஸ்நான நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது. பிரம்மோற்சவ விழா நாட்களில் விஐபி சிபாரிசு கடிதங்கள் ஏற்க பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.