ராஜுவின் இந்த குணம் தான் ரசிகர்களை கவர்கிறது...அன்பைப் பொழியும் ரசிகர்கள்
சென்னை: தான் செய்தது தவறு என்று மன்னிப்பு கேட்ட ராஜுவுக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
அடுத்தவர்கள் தம்மை பற்றி என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று மனதார கையெடுத்து கும்பிட்டு கேட்டுள்ளார்.
மன்னிப்பு கேட்டு விட்டு அதற்கு விளக்கம் கொடுத்த ராஜுவின் பெருந்தன்மையை பார்த்து ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

சின்னத்திரை நடிகர்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதைய சீசனில் அனைவரது மனதையும் கவர்ந்த ஒரு போட்டியாளராக இருந்து வரும் ராஜு செய்த செயல் தற்போது பலரையும் கவர்ந்து வருகிறது. இவர் ஒரு சின்னத்திரை நடிகராக பலருக்கும் பரிச்சயமாகி இருந்தாலும் தற்போது பிக்பாஸ் போட்டியாளராக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகி வருகிறார். யாரும் எதிர்பார்க்காத வகையில் இவருடைய என்ட்ரி இந்த நிகழ்ச்சியில் இருந்தாலும் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகிறனர்.

பாவனியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு
ரசிகர்களின் பேராதரவினால் இவர் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் போது இவரால் தான் இந்த நிகழ்ச்சிக்கு சுவாரசியம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது என்று பலர் கூறி வருகின்றனர். டைமிங் காமெடியால் அனைவரையும் கவர்ந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவருடைய மிமிக்ரி திறமை பலருக்கும் பிடித்துவிட்டது. எப்போதுமே ஜாலியாக இருந்து கொண்டிருந்தாலும் ஒரு சில நேரங்களில் இவர் செய்யும் செயல்கள் பலரையும் வியப்பு அடைய தான் செய்து இருக்கிறது. அதுவும் சக போட்டியாளரான பாவனியிடம் இவர் காட்டும் வெறுப்பு ஒரு சிலருக்கு பிடிக்காமல் தான் இருந்து வருகிறது.

அதிரவைத்த கேள்வி
இந்த வார நாமினேஷனில் இவருடைய பெயர் இருக்கும் நிலையில் இவருடைய ரசிகர்கள் இவருக்கு அதிகமாக வாக்களித்து இப்ப வரைக்கும் இவர் தான் வாக்குகளின் அடிப்படையில் முதல் இடத்தில் இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர்தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்றெல்லாம் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இவர் பாவனியை பற்றி அபிநயிடம் கேட்டது ஒரு சிலரை முகம் சுளிக்க வைத்துள்ளது. ரசிகர்களின் மனதில் முதல் இடத்தில் இருக்கும் நிலையில் பாவனி மற்றும் அபிநய் விஷயத்தில் நடந்து கொண்டது தவறு என்று பலர் கூறிவந்தனர்.

ரசிகர்களை கவர்ந்த வார்த்தை
தன்னுடைய தவறுக்கு மனம் வருந்திய ராஜு அன்றிரவே சக போட்டியாளர்கள் இடம் தான் செய்தது தவறா என்று விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் சம்பந்தப்பட்ட பாவனி மற்றும் அபிநயிடம் எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் முதல்முறையாக இவர் அனைத்து போட்டியாளர்களின் முன்னிலையிலும் பாவனி மற்றும் அபிநயிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதுவும் நாமினேஷனுக்கு முன்பாக நான் மன்னிப்பு கேட்டு இருந்தால் நன்றாக இருக்காது என்றும் நாமினேஷன் முடிந்த பிறகு மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த ஒரு வார்த்தையை கேட்டதும் இவருடைய ரசிகர்கள் இந்த குணத்தால் தான் நீங்கள் உயர்ந்துகொண்டே வருகிறீர்கள் என்று இவருக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications