தாலி சென்டிமெண்ட்..நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லுங்க.. வானத்தை போல சீரியல் அட்ராசிட்டி..
சென்னை: வானத்தை போல சீரியலில் பொன்னியின் அலம்பல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. தன்னை ஏமாற்றி நடத்திய கல்யாணத்தை ஏற்றுக் கொண்டு சின்ராசுவுடன் பொன்னி வாழ்வதாக இல்லை. தினம் தினம் சின்ராசுவிற்கு குடைச்சல் கொடுக்கும் பொன்னி தாசில்தார் சந்தியாவை பஞ்சாயத்துக்கு இழுத்து தாலியை கழற்றித்தர கேட்கிறார்.
சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் வானத்தை போல சீரியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிப்பரப்பாகி வருகிறது. இது அண்ணன் தங்கச்சி பாசத்தை அடிப்படையாக கொண்டு ஒளிப்பரப்பாகும் சீரியல். இந்த சீரியல் தற்போது 500 எபிசோடுகளை தாண்டி ஒளிப்பரப்பாகி வருகிறது. இதுவரை வானத்தை போல சீரியலில் ஏகப்பட்ட மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.
ஹீரோ மாறினார், ஹீரோயின் மாறினார். இப்போது வில்லியும் மாறி விட்டார். பொன்னியாக நடித்து வந்த பிரீத்தி குமார் சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு பதில் இப்போது பொன்னி ரோலில் சைந்தினி பிரகாஷ் நடித்து வருகிறார்.
பொன்னி சின்ராசு திருமணம்
பொன்னியை காதலித்த சரவணன் ஜெயிலுக்கு போக பொன்னி கழுத்தில் சின்ராசு தாலி கட்டி விட்டார். இதனால் சின்ராசு - சந்தியா காதல் பிரிகிறது. இதற்கு ராஜபாண்டி தான் காரணம். கடைசி நேரத்தில் சரவணனை மிரட்டி கத்தி முனையில் பொன்னியின் கழுத்தில் சின்ராசுவை தாலி கட்ட வைக்கிறார். அதன் பின்பு நடந்த சண்டையில் கத்தி குத்துப்பட்டு ராஜபாண்டி மருத்துவமனையில் அட்மிட் ஆகி பல பிரச்சினைகள் மாறி மாறி வந்து கொண்டே தான் இருக்கிறது.
பொன்னியின் வில்லத்தனம்
தனக்கு பிடிக்காத திருமணத்தை செய்து வைத்த அப்பா அம்மாவையும், சின்ராசு குடும்பத்தையும் தினம் தினம் டார்ச்சர் செய்கிறார் பொன்னி. உச்சக்கட்டமாக சந்தியாவிற்கும் சின்ராசுவுக்கும் தொடர்பு இருப்பதாக கிளப்பி விடுகிறார். பஞ்சாயத்தை கூட்டி நியாயம் கேட்கிறார் பொன்னி.
சீரியல் பஞ்சாயத்து
மரத்தடியில் ஜமுக்காளம் விரித்து சொம்பு சகிதமாக பஞ்சாயத்து நடக்கிறது. அரசு ஊழியர் தாசில்தார் சந்தியாவும், பஞ்சாயத்து தலைவர் சின்ராசுவும் குற்றவாளிகளாக நிற்கிறார்கள். இருவருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி அசிங்கப்படுத்துகிறார் பொன்னி. அதற்கு பஞ்சாயத்தாரோ, சந்தியா தனது கழுத்தில் உள்ள தாலியை கழற்றி கொடுத்து விட்டு டிரான்ஸ்பர் பெற்றுக்கொண்டு ஊரை விட்டு செல்ல வேண்டும் என்று தீர்ப்பளிக்கின்றனர்.
தாலி சென்டிமெண்ட்
சந்தியாவின் கழுத்தில் இருந்து தாலியை எடுக்க சண்டை போடுகிறார் பொன்னி. அதை தடுக்கிறாள் துளசி.
பஞ்சாயத்து சொன்ன தீர்ப்பை ஏற்றுக்கொள்ள துளசி தயாராக இல்லை. சந்தியா கழுத்தில் மூன்று முடிச்சு போட சொல்கிறார். இந்த ட்விஸ்ட்டை பொன்னியே எதிர்பார்க்கவில்லை. ஆனால் மூன்றாவது முடிச்சு போடும் முன்பாக தடுத்து விடுகிறார் பொன்னியின் அப்பா.
நாட்டாமை தீர்ப்பு
கடைசியில் நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லுங்க என்று கூட்டத்தில் ஒருவர் கத்த.. நடந்த சம்பவங்களைப் பார்த்து சந்தியா தாலியை கழற்ற வேண்டாம் எனவும் சந்தியா விஷயத்தில் பொன்னி தலையிடக்கூடாது என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. விடுப்பா விடுப்பா குடும்பம்னா சண்டை சச்சரவு இருக்கத்தானே செய்யும் என்று பஞ்சாயத்து கலைகிறது. ஆனால் பொன்னியோ... உங்க யாரையும் நான் நிம்மதியா இருக்க விடமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே கண்களை உருட்டி விட்டு செல்கிறாள்.
ஆடி மாதத்தில் தாலி பறிப்பா?
ஆடி மாதத்தில் தாலி பாக்கியத்திற்காக பல பெண்கள் கோவில் கோவிலாக சென்று சாமி கும்பிட்டு வரும் நிலையில் டிவி சீரியலில் தாலியை கழற்றச் சொல்லி சண்டை போடுகின்றனர் பெண்கள். தாலி சென்டிமெண்ட் சீனை வைத்து பெண்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார் வானத்தைப் போல சீரியல் இயக்குநர். என்னதான் சீரியல் சண்டை சச்சரவு என சென்றாலும் 500 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துள்ளது. அதனை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். எது எப்படியோ தினம் தினம் சண்டையாக இருந்தால்தான் டிஆர்பியில் டாப் 5ல் வர முடியும் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார் இயக்குநர்.