கொரோனா பாதித்தவருடன் பயணம் செய்த தமிழகத்தை சேர்ந்த 47 பேர்.. பட்டியலை அனுப்பியது கேரளா
திருவனந்தபுரம்: கொரோனா பாதித்த இத்தாலி பயணிகளுடன் விமானத்தில் பயணம் செய்த தமிழகத்தை சேர்ந்த 47 பேரின் பட்டியலை தமிழக சுகாதாரத் துறைக்கு கேரள அரசு அனுப்பி உள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த முதியவர் ஒருவரும்,. டெல்லியைச் சேர்ந்த ஒருவரும் என இரண்டு பேர் இந்தியாவில் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர்.
இந்நிலையில் நாட்டிலயே கேரளாவில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சுமார் 19 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட இத்தாலி சுற்றுலா பயணி ஒருவர் வர்க்கலாவில் உள்ள சொகுசு விடுதி தங்கியிருந்தார். இதையடுத்து அந்த விடுதி உடனடியாக மூடப்பட்டது.
கொரோனா.. கண்காணிப்புக்கு இடையே ஆஸ்பத்திரியிலிருந்து எஸ்கேப்பான 5 பேர்.. நாக்பூரில் பரபரப்பு
பட்டியல் தயார்
கடந்த மாதம் 27ம் தேதி திருவனந்தபுரத்துக்கு இத்தாலி சுற்றுப்பயணி வந்துள்ளார். இவர், கடந்த 11ம் தேதிதான் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார அதுவரை அவர் எங்கெல்லாம் சென்றார்? யார் யாரை சந்தித்தார் என்ற விவரம் சேகரிக்கப்பட்டது. இதுபோல், கொரோனா பாதித்த, லண்டனில் இருந்து திரும்பிய திருவனந்தபுரம் நபருடன் பழகியவர்கள் குறித்த விவரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன்படி , கொரோனா பாதித்த இத்தாலி பயணிகளுடன் விமானத்தில் பயணம் செய்த தமிழகத்தை சேர்ந்த 47 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தமிழக சுகாதாரத் துறைக்கு கேரள அரசு அனுப்பி வைத்துள்ளது.
குமரி மக்கள் அதிகம்
திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் கோபால கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு இது தொடர்பாக அளித்த பேட்டியில், ‘‘திருவனந்தபுரம் மாவட்டத்தில் இத்தாலியை சேர்ந்த சுற்றுலா பயணி உட்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்கள் வந்த விமானத்தில் தமிழகத்தின் குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 47 பேர் பயணம் செய்து உள்ளார்கள்.. இதில் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம்.
கொரோனா பயணிகள்
கடந்த 10ம் தேதி பக்ரைனில் இருந்து வந்த கல்ப் ஏர் விமானத்தில் 21 பேரும், 11ம் தேதி தோகாவில் இருந்து வந்த கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் 26 பேரும் கொரோனா பாதித்தவர்களுடன் வந்துள்ளார்கள்.. இவர்கள் பெயர் விவரம் மற்றும் தொலைபேசி எண்கள் சேகரிக்கப்பட்டு தமிழக சுகாதாரத் துறைக்கு அனுப்பி வைத்துள்ளோம். அத்துடன் அவர்களை கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளோம்" என்றார்.
கொரோனா அறிகுறி தம்பதி
இதனிடையே ஆலப்புழாவில் வெளிநாட்டை சேர்ந்த தம்பதி கொரோனா அறிகுறிகளுடன் நேற்று முன்தினம் ஆலப்புழா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தார்கள். இவர்களுக்கு தனிவார்டில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் திடீரென அவர்கள் யாரிடமும் சொல்லாமல் மாயமாகினர். இது குறித்து போலீசில் மருத்துவர்கள் தெரிவித்தனர் இதையடுத்து போலீசார் அவர்களை கொச்சி விமான நிலையத்தில் இருப்பதை கண்டுபிடித்து அவர்களை பிடித்து வந்து ஆலப்புழா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களை அழைத்து சென்ற டாக்ஸி டிரைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.