எச்சரித்த ரயில்வே.. கண்மூடி திறப்பதற்குள் சோகம்.. காலையிழந்த ஐயப்ப பக்தர்.. அதிர்ச்சி சம்பவம்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனத்திற்காக சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த பக்தர் ஒருவர் ரயிலில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
ஓடும் ரயிலிருந்து இறங்க முயன்றபோது அவர் நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையில் சிக்கிக்கொண்டார். உடனடியாக துரிதமாக செயல்பட்ட ரயில்வே அதிகாரிகள் ரயிலை நிறுத்தி அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தையடுத்து பக்தர்களுக்கு ரயில்வே நிர்வாகம் கூடுதல் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
சபரிமலை சீசன்..ஆந்திரா, தெலுங்கானா ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்.. கோவை வழியாக ஸ்பெஷல் ரயில்கள்
பயணம்
இந்த சம்பவம் கேரளாவின் செங்கனூர் ரயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ளது. தென்காசியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் தீவிர ஐயப்ப பக்தராவார். இந்நிலையில் கடந்த 48 நாட்களாக விரதமிருந்து சபரிமலைக்கு செல்ல தயாராகி வந்திருக்கிறார். இந்நிலையில் விரதம் முடிந்ததையடுத்து அவர் தனது வீட்டின் அருகில் உள்ள குழுவினருடன் ஐயப்பனை தரிசனம் செய்ய புறப்பட்டுள்ளார். பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் இதற்கேற்றார் போல டிக்கெட் முன்பதிவு செய்து குழுவினர் பயணித்துள்ளனர். இந்த ரயில் தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு திருநெல்வேலி தென்காசி வழியாக கேரளாவில் நுழைந்து பாலக்காடு வரை செல்லும்.
விபத்து
இந்த ரயில் நேற்றிரவு செங்கனூர் ரயில் நிலையத்தை வந்து சேர்ந்திருக்கிறது. ஆனால் கருப்பசாமி உறங்கிக்கொண்டே இருந்திருக்கிறார். அவரது குழுவினர் இவரை விட்டுவிட்டு இறங்கி விட்டுள்ளனர். பின்னர் தேடியபோது அவரை காணவில்லை. பின்னர் ரயிலின் வெளியிலிருந்து கருப்பசாமியை உடன் வந்தவர்கள் கூக்குரலிட்டு அழைத்திருக்கின்றனர். பின்னர் திடீரென விழிப்பு வந்து எழுந்து பார்த்தபோது ரயில் செங்கனூர் நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது. இதனையடுத்து கருப்பசாமி அவசர அவசரமாக கீழே இறங்கியுள்ளார். ஆனால் அதற்குள் ரயில் வேகமெடுக்க தொடங்கிவிட்டது. இதனால் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் உள்ள இடைவெளியில் கருப்பசாமி சிக்கிக்கொண்டார்.
படுகாயம்
இதனை கண்ட அதிகாரிகள் உடனடியாக எச்சரித்து ரயிலை நிறுத்தியுள்ளனர். ஆனால் அதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டுள்ளது. ரயில் சக்கரங்கள் கருப்பசாமியின் கால்கள் மீது ஏறியுள்ளது. எனவே அவரால் அங்கிருந்து வெளியேறவும் முடியவில்லை. பின்னர் பாதுகாப்பு அதிகாரிகள் நடைமேடையை உடைத்து கருப்பசாமியை காப்பாற்றியுள்ளனர். கால் விரல்கள், கால் மூட்டு என இடுப்புக்கு கீழே பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கோட்டயம் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உள்ளுறுப்புகளிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். விபத்தையடுத்து செங்கனூர் ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்வே காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அறிவுறுத்தல்கள்
மேலும், சபரி மலைக்கு வரும் பக்தர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கணிசமான அளவில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பல்வேறு விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் ஆந்திராவிலிருந்து வந்த சபரிமலை பக்தர்கள் பேருந்து விபத்துக்கு உள்ளானதில் 40க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அதேபோல கோழிக்கோடு பகுதியில் வேன் ஒன்று லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். தொடர் விபத்து காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் வாகன நிறுத்தமிடமும் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் ஆங்காங்கே ஓய்வெடுத்து பொறுமையாக யாத்திரையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.