பிரியாணியை திறந்து பார்த்தா.. ச்சீ என்னங்க இது? என்ன நடக்கிறது கேரளாவில்? அப்படியே பீதியில் மக்கள்!
திருவனந்தபுரம்: கேரளாவில் பிரியாணி சாப்பிட்டு இளம்பெண் மரணம் அடைந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஹோட்டல்களில் அதிரடி ரெய்டு நடத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பிரியாணி உள்ளிட்ட உணவுகளில் பூரான், எலிகள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
மேலும், இந்த ரெய்டில் மிக மிக சுகாதார கேடான முறையில் ஏராளமான ஹோட்டல்கள் இயங்கி வருவது தெரியவந்துள்ளது. இதன் ஒருபகுதியாக, 139 ஹோட்டல்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
இதனிடையே, தொடர்ந்து ஹோட்டல் உணவுகளின் மூலம் அகால மரணங்கள் நிகழ்வதால் கேரள மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இளம்பெண் உயிரை பறித்த பிரியாணி
கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள பெரும்பாலைச் சேர்ந்தவர் அஞ்சு ஸ்ரீபார்வதி. இவர் கடந்த டிசம்பர் 31-ம் தேதி காசர்கோட்டில் உள்ள 'ரோமன்சியா' என்ற உணவகத்தில் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளார். குழிமந்தி என அழைக்கப்படும் அந்த பிரியாணியை சாப்பிட்ட அவருக்கு, சிறிது நேரத்திலேயே அவருக்கு வாந்தி - மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கர்நாடகாவின் மங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். மருத்துவ அறிக்கையில் ஃபுட் பாய்சன் தான் இளம்பெண்ணின் மரணத்திற்கு காரணம் எனக் கூறப்பட்டது.

தொடரும் "பிரியாணி மரணங்கள்"..
இந்தச் சம்பவமானது கேரளா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில், கடந்த வாரம்தான் ஹோட்டல் ஒன்றில் பிரியாணி சாப்பிட்ட கோட்டயத்தை சேர்ந்த நர்ஸ் ஒருவர் மரணம் அடைந்தார். இதனால் கேரள மக்கள் மத்தியில் கடுமையான அச்சம் நிலவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் , மாநிலத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்டுகளிலும் சோதனை நடத்த உத்தரவிட்டார்.

பிரியாணியில் பூரான்
இந்நிலையில், கேரள உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அம்மாநிலத்தில் உள்ள ஹோட்டல்களில் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். அப்போது பல ஹோட்டல்களில் மிகவும் பழைய எண்ணெயையும், கெட்டுப் போன இறைச்சிகளையும் வைத்து பிரியாணி உள்ளிட்ட உணவுகள் செய்யப்படுவது தெரியவந்தது. மேலும், கெட்டுப்போன இறைச்சி என தெரியக்கூடாது என்பதற்காக தடை செய்யப்பட்ட சுவையூட்டிகள், வாசனைப் பொடிகளையும் ஹோட்டல்கள் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக, எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பிரியாணியில் பூரான்கள் இருந்ததை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதுமட்டுமல்லாமல், கிச்சன்களில் சமைக்கப்பட்ட பிரியாணி முதலிய உணவுகளில் எலிகள் நடமாடுவதும் தெரியவந்தது. இதனை பார்த்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

139 ஓட்டல்களுக்கு சீல்
இந்நிலையில், கேரளா முழுவதும் இதுபோல சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த 139 ஹோட்டல்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், நூற்றுக்கணக்கான ஹோட்டல் உரிமையாளர்களுக்கு நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் இத்தனை ஹோட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டிருப்பது கேரளாவில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இந்த நடவடிக்கை தொடரும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. இதனால் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த ஆயிரக்கணக்கான ஹோட்டல்கள் இந்த வேட்டையில் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications