நோ நெவர்! நான் இருக்குற வரை நடக்காது.. ஸ்டாலின் ஸ்டைலில் பினராயி ஆக்சன்.. அடம்பிடிக்கும் கேரள ஆளுநர்
திருவனந்தபுரம்: கேரள சட்டமன்றத்தில் சமீபத்தில் துணை வேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதாவை அம்மாநில அரசு நிறைவேற்றியது. இதனையடுத்து இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மசோதா கல்வி நிறுவனங்களின் சுயாட்சியை பறிக்கும் என்று அம்மாநில ஆளுநர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், "துணை வேந்தர்கள் தகுதியின் அடிப்படையிலே நியமிக்கப்படுவார்கள். இந்த அதிகாரத்தை அரசுக்கு வழங்க முடியாது" என்று திட்டவட்டமாக ஆளுநர் மறுத்துள்ளார்.

துணை வேந்தர்கள் நியமனம்
மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் ஆளுநர்களால் நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், பாஜக ஆட்சியில் இருக்கும் குஜராத் மாநிலத்தில் துணை வேந்தர்களை நியமிக்கும் பொறுப்பு அம்மாநில அரசுக்கே வழங்கப்பட்டது. இதேபோல தெலங்கானாவிலும் துணை வேந்தர்களை அம்மாநில அரசே நியமித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கேரளாவிலும் மாநில அரசு துணை வேந்தர்களை நியமிக்கும் வகையில் மசோதவை சட்டமன்றத்தில் அம்மாநில அரசு சமீபத்தில் நிறைவேற்றியது.

கொலை முயற்சி
இந்த மசோதா குறித்து அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் மாநில அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "கடந்த 2019ல் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் எனக்கு எதிராக கொலை முயற்சி நடந்தது. இதற்கு அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்தான் காரணம். ஆனால் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை." என்று குற்றம்சாட்டினார். மேலும், "மாநில அரசு ஆளுநர் அலுவலகத்தை கேவலப்படுத்தவும் இழிவுபடுத்தவும் முயற்சிக்கிறது." என்று கூறினார்.

அனுமதிக்க மாட்டேன்
மேலும், என்னை பணிய வைக்க மாநில அரசு ஒவ்வொரு யுக்தியையும் பயன்படுத்துகிறது என்று கூறிய அவர், துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், "எல்லாமே தகுதியின் அடிப்படையில்தான் நியமிக்கப்படும். துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்க முடியாது. இது நிர்வாகத் தலையீட்டிற்குச் சமம். இந்த மசோதா கல்வி நிறுவனங்களின் சுயாட்சியை பறிக்கும். நான் இருக்கும் வரை இதற்கு அனுமதிக்க மாட்டேன்." என்று கூறியுள்ளார்.

பூஞ்சி ஆணையம்
முன்னதாக மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய்வதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஆணையத்தில், 'அரசியல் சட்டத்தில் வழங்கப்படாத அதிகாரங்கள் ஆளுநருக்கு வழங்கப்படக்கூடாது. குறிப்பாக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநடரிம் இருந்தால் அது அதிகாரத்திற்கு வழிவகுக்கும்' என்று கூறப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.












Click it and Unblock the Notifications