நடிகை பலாத்கார வழக்கு.. நடிகர் திலீப் மொபைலில் ஆதாரங்களை மீட்ட ஹேக்கர்! பரபர வழக்கில் இன்று தீர்ப்பு
திருவனந்தபுரம் : 2017ஆம் ஆண்டில் கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், வழக்கு தொடர்பாக நடிகர் திலீப்பின் செல்போனில் இருந்து அழிக்கப்பட்ட முக்கியமான டிஜிட்டல் கோப்புகளை ஹேக்கர் சாய்சங்கர் மீட்டெடுத்துள்ள நிலையில், வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
சினிமா படபிடிப்பு முடிந்து காரில் திரும்பிய கேரளத்தின் பிரபல நடிகை ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு கடத்தப்பட்டு கடும் பாலியல் அத்துமீறலுக்கு ஆளானார்.
இந்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கின் விசாரணை மந்தமாக நடந்துகொண்டிருந்தபோது, இயக்குநர் பாலசந்திரகுமார், நடிகர் திலீப் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
காருக்குள் நடிகையை சிதைத்து வீடியோ.. நடிகர் திலீப் தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. 2வது நாளாக விசாரணை
கேரளாவில் பரபரப்பு
தன்னைக் கைதுசெய்த போலீஸ் அதிகாரிகளை கொலை செய்ய திலீப் சதித்திட்டம் தீட்டியதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் பாலசந்திரகுமார். நடிகை பாலியல் வழக்குடன், அதிகாரிகளை கொலைசெய்ய திட்டம் தீட்டியதாக புதிய வழக்கும் திலீப் மீது பாய்ந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் நடிகர் திலீப் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இன்று நண்பகலில் கேரள நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இதனால் கேரளாவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
மீட்பு முக்கிய ஆதாரங்கள் மீட்பு
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நடிகர் திலீப்பின் செல்போனில் இருந்து அழிக்கப்பட்ட முக்கியமான டிஜிட்டல் கோப்புகளை ஹேக்கர் சாய்சங்கர் மீட்டெடுத்துள்ள நிலையில், வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டப்பட்ட சதி வழக்கில் ஏழாவது குற்றவாளியான சாய், முன்னதாக செல்போனில் இருந்து அழித்தது குறிப்பிடத்தக்கது.
ஹேக்கர் சாய் மீட்டார்
இது தொடர்பாக சிறப்பு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் அறிவுறுத்தலுக்குப் பிறகு திங்கள்கிழமை விசாரணைக்கு இடையில் திலீப்பின் தொலைபேசியில் இருந்து சாட்கள், போட்டோ, வீடியோக்கள் உட்பட 10 ஃபைல்களை சாய் மீட்டார். முன்னதாக, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மொபைல் போன்களை ஆய்வு செய்த தடயவியல் ஆய்வகம் பல முயற்சிகளுக்குப் பிறகு இந்த ஃபைல்களை மீட்டெடுக்க முடியவில்லை என கூறியிருந்தது. இந்நிலையில் தற்போது மீட்டெடுக்கப்பட்ட பைல்கள் முக்கியமான ஆதாரங்கள் என போலீசார் கூறியுள்ளனர்.
உறவினர்களிடம் விசாரணை
திங்கள்கிழமை மதியம் 2 மணியளவில் போலீஸ் விசாரணைக் குழு முன் சாய் ஆஜரான நிலையில், மாலைக்குள் அவரிடம் விசாரணை முடிந்தது. அந்த வழக்கின்படி, கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக பதிவு செய்யப்பட்ட பரபரப்பான வழக்கை கையாண்ட விசாரணைக் குழுவில் இடம்பெற்றிருந்த இரண்டு போலீஸ்காரர்களைக் கொல்ல நடிகர் திலீப், அவரது உறவினர்கள் மற்றும் சில உதவியாளர்கள் சதி செய்ததாகவும் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, திலீப்பின் சகோதரர் பி.அனூப் மற்றும் மைத்துனர் டி.என்.சுராஜ் ஆகியோரிடம் குற்றப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை விசாரிக்கின்றனர்.
காவ்யாவிடம் மீண்டும் விசாரணை
விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு ஆலுவா போலீஸ் கிளப்பில் ஆஜராகுமாறு அவர்களுக்கு முன்னதாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் விசாரணையின் அடிப்படையில், திலீப்பின் மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவனை விசாரணைக்கு அழைப்பதா என்பது குறித்து விசாரணைக் குழு முடிவு செய்யும். விரைவில் அவருக்கு மற்றொரு சம்மன் அனுப்பப்படலாம். கடந்த முறை, போலீஸ் கிளப்பில் விசாரணைக் குழு முன் ஆஜராக மறுத்த அவர், வழக்கின் சாட்சியாக குற்றப்பிரிவு நிர்ணயித்த இடத்தில் தன்னை கட்டாயப்படுத்தக் கூடாது என்று கூறினார். சட்ட ஆலோசனையின்படி, அவரது விசாரணையை போலீசார் ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.