பிராமணர்கள் கால்களை கழுவிய பக்தர்.. வெடித்த சர்ச்சை.. கேரளா உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!
திருவனந்தபுரம்: கேரளாவில் பிராமணர்களின் கால்களை கழுவி பாத பூஜை செய்யும் சர்ச்சை தொடர்பாக கேரளா உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கி உள்ளது. இவ்வழக்கில் கொச்சின் தேவஸ்வம் போர்டு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அனுமதி வழக்கு விசாரணையை பிப்ரவரி 25-ந் தேதிக்கு கேரளா உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கேரளா மாநிலம் திருப்புனித்துறை ஸ்ரீ பூர்ணத்ர ஈசன் கோயிலில் 12 பிராமணர்களின் கால்களை கழுவி பக்தர் ஒருவர் பூஜை செய்தார்; தமது பாவங்களை போக்குவதற்காக 12 பிராமணர்களின் கால்களை அந்த பக்தர் கழுவினார் என கேரளா கமுதி என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
கேரளாவில் சர்ச்சை
கேரளாவில் இந்த செய்தி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. 21-ம் நூற்றாண்டிலும் இத்தகைய மூடப் பழக்க வழக்கங்கள் நீடிப்பதா? என்கிற விவாதமும் களைகட்டியது. இதனைத் தொடர்ந்து பாத பூஜை தொடர்பாக கேரளாவின் தேவஸ்வம் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன், கொச்சின் தேவசம் போர்டுவிடம் அறிக்கை கேட்டிருந்தார்.
நிறுத்த அறிவுறுத்தல்
இதுகுறித்து கொச்சி தேவசம் போர்டு தலைவர் வி.நந்தகுமாருடன் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தொலைபேசியில் அழைத்தும் விளக்கம் கேட்டார். அப்போது சீர்திருத்தங்களுக்கு பெயர் பெற்ற கேரளாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் இத்தகைய பழமையான நடைமுறைகளைத் தவிர்க்க தேவையான கடும் நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார். மேலும் நாகரீக சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத இதுபோன்ற நடைமுறைகளை மற்ற தேவசம்போர்டுகளின் கீழ் உள்ள கோயில்களிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
கேரளா ஹைகோர்ட் விசாரணை
இதனிடையே இந்த விவகாரத்தை கேரளா உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. கேரளா உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், அஜித்குமார் ஆகியோர் இந்த வழக்கை இன்று விசாரித்தனர். இவ்விசாரணையின் போது கொச்சின் தேவசம் போர்டு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், பக்தர்கள் யாரும் 12 பிராமணர்களின் கால்களை கழுவவில்லை. தந்திரிதான் 12 பிராமணர்களின் கால்களை கழுவினார். அது ஒரு பூஜை நடைமுறை என்றார்.
பிப்.25-க்கு ஒத்திவைப்பு
இதனைத் தொடர்ந்து கொச்சின் தேவசம் போர்டு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய 2 வாரங்கள் அவகாசம் அளித்தனர் நீதிபதிகள். மேலும் இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.