பக்தரின் காலை பிடித்து விட்ட அமைச்சர்.. சபரிமலையில் நெகிழ்ச்சி சம்பவம்!.. குவியும் பாராட்டு
திருவனந்தபுரம்: காலில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக துடித்த ஐயப்ப பக்தருக்கு கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சர் ஒருவர் கால் பிடித்து விட்டு 'மசாஜ்' செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவிலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை கார்த்திகை மாதம் 1ம் தேதி தொடங்கி 41 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு கடந்த 16ம் இந்த மண்டல பூஜை தொடங்கியுள்ளது.
இதனால் ஐயப்ப பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சபரிமலை மண்டல பூஜை: ஐயப்ப பக்தர்களுக்கு தேவசம்போர்டின் புது ரூல்ஸ்.. முழு விபரம்
தரிசனம்
கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இந்த மண்டல பூஜை டிசம்பர் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. பின்னர் 27ம் தேதி பூஜை முடிந்தவுடன் நடை சாத்தப்படும். இதற்கிடையில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் ஆன்லைன் வாயிலாக டிக்கெட் புக் செய்து பின்னர் தரிசனம் செய்யலாம்.
மண்டல பூஜை
இந்த நாட்களில் பக்தர்கள் சபரிமலையின் பெருவழிப்பாதை, சிறுவழிப்பாதை உள்ளிட்ட அனைத்து பாதைகளின் வழியாகவும் பயணிக்கலாம். இதில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கு உதவும் வகையில் நிலக்கல் உள்ளிட்ட 13 இடங்களில் 'ஸ்பாட் புக்கிங்' வசதியை தேவசம் போர்டு செய்து கொடுத்திருக்கிறது. இங்கு ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு புக்கிங் செய்துகொள்ளலாம். இறுதியாக டிசம்பர் 27ம் தேதி நடை சாத்தப்படுவதற்கு முன்னர் 26ம் தேதி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு பின்னர் மண்டல பூஜை நடைபெறும். பின்னர் நடை சாத்தப்பட்டு மீண்டும் டிசம்பர் 30ம் தேதி நடை திறக்கப்படும்.
அமைச்சர்
இதற்கிடையில் பக்தர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இவர்களின் பாதுகாப்புக்காக சுமார் 1,300 கேரள காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், இவர்களுடன் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக காவல்துறையினரும், மத்திய அதிரடி விரைவு படையினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாதுகாப்பு பணிகள் மற்றும் கோயிலில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின, பழங்குடியின நலத்துறை, தேவசம் போர்டு அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் நேற்று (நவ.18) கோயிலுக்கு சென்றிருந்தார்.
மசாஜ்
இந்த பயணத்தின் போது ஐயப்ப பக்தர் ஒருவர் கால் வலியால் மலை ஏற முடியாமல் அவதிப்பட்டுள்ளார். இதனை பார்த்த அமைச்சர் உடனடியாக காரிலிருந்து இறங்கி கால் வலியால் அவதிப்பட்ட பக்தரிடம் விசாரித்துள்ளார். அப்போது பக்தருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டிருப்பது தெரிந்திருக்கிறது. இதனையடுத்து, அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் பக்தரின் காலை பிடித்து நீவி விட்டு மசாஜ் செய்துள்ளார். இதனை அருகில் இருந்தவர்கள் போட்டோ எடுத்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஐயப்ப பக்தருக்கு மசாஜ் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.