கேரளாவில் அதிவேகமாக பரவும் கொரோனா - ஓணம் பண்டிகையை பொது இடங்களில் கொண்டாட தடை
கேரளா மாநிலத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் பொது இடங்களில் ஓணம் பண்டிகைக் கொண்டாட அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பெருந்தொற்று அதிதீவிரமாக பரவி வருகிறது. நாடு முழுவதுமான மொத்த பாதிப்பில் கேரளாவில் மட்டும் 50 சதவிகித பாதிப்பு பதிவாகி வருவதால் ஓணம் உள்ளிட்ட பண்டிகைகளை பொது இடங்களில் கொண்டாடவோ, பெருமளவில் கூடவோ தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் மட்டும் தினசரியும் 20 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், ஓணம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து கொண்டாடப்படுகின்றன. இதனால், மக்கள் பெருமளவில் கூட வாய்ப்புள்ளது. அதுவே தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் ஆபத்து உள்ளது.

ஓணம் திருவிழா கேரளாவில் களைகட்டப்போகிறது. ஹஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் வரைக்கும் பத்து நாட்கள் திருவிழா கோலம்தான். ஓணம் என்றாலே வீடு முழுக்க அலங்காரமும், அழகாய் ஆடை அணிந்து வலம் வரும் இளசுகளும் குழந்தைகளும் தான் நினைவுக்கு வருவார்கள். அதை விட முக்கியமாக 'ஓணம் சத்ய' எனப்படும் திருவோண திருநாள் விருந்துதான். ஓணம் பண்டிகைக்கு வகை வகையாக சமைத்து தலைவாழை இலை போட்டு ருசியாக சாப்பிடுவதோடு உறவினர்களுக்கும் விருந்து வைப்பார்கள். கிச்சடி, பச்சடி, அவியல், இஞ்சிப்புளி, கூட்டு, எரிசேரி, அடைபிரதமன், பருப்பு பிரதமன், என வகை வகையாக ருசி ருசியாக சமைத்து சாப்பிடுவார்கள்.
வீட்டு வாசல்களில் பூக்கோலம் போட்டு விளக்கேற்றி தங்களைக் காண வரும் மகாபலி சக்ரவர்த்தியை வரவேற்பார்கள். நடனங்கள் ஆடியும் ஊஞ்சல் விளையாட்டுகள் ஆடியும் ஒணம் பண்டிகையை கேரளாவில் கொண்டாடுவார்கள். கடந்த சில ஆண்டுகாலமாகவே கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடுவதில் பல தடைகள் ஏற்பட்டு வருகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு பெருவெள்ளம் ஏற்பட்டு ஓணம் பண்டிகை கொண்டாட முடியாமல் போனது. கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தி பண்டிகை கொண்டாட தடை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கேரள மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கடைகள், நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேரளா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள கொரோனா தொடர்பான வழக்கில், தடுப்பூசி தொடர்பான வழக்கில் அம்மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், கேரளாவில் உள்ள மதுக்கடைகளுக்கு செல்வோர் தடுப்பூசி ஒரு டோஸ் போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் அல்லது ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலம் நெருங்குவதை முன்னிட்டு மாநில அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தலைமை செயலாளரும், மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய தலைவருமான வி.பி.ராய் செய்தியாளர்களிடம் பேசும் போது, பண்டிகைகளையொட்டி, உள்ளூர் மட்டத்திலான கட்டுப்பாடுகள் 12ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக கூறினார்.
ஓணம் உள்ளிட்ட பண்டிகைகளை பொது இடங்களில் கொண்டாடவோ, பெருமளவில் கூடவோ தடை விதிக்கப்படுகிறது. புதிய பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் பரிசோதனை அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆவணி மாத பூஜை, திருஓணம் திருவிழாவை முன்னிட்டு வரும் 15ஆம் தேதி மாலை சபரிமலைக்கோவில் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க, நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறிய வி.பி.ராய், இன்னும் தடுப்பூசி போடாதவர்கள் மற்றும் தடுப்பூசி போட இயலாதவர்கள், அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே செல்லலாம். இத்தகையவர்களுக்கு கடைக்காரர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். வீடுகளுக்கே சென்று பொருட்கள் வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications