கொடுமை.. மகளை கர்ப்பிணியாக்கிய தந்தை.. 106 ஆண்டு சிறை தண்டனை.. கேரளா சிறப்பு நீதிமன்றம் அதிரடி
திருவனந்தபுரம்: கேரளாவில் பெற்ற மகளையே மிரட்டி பலாத்காரம் செய்த ரப்பர் தோட்ட தொழிலாளிக்கு 106 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கேரளாவை சேர்ந்தவர் 12 வயது மகள். இவரது தந்தை ரப்பர் தோட்டத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தொழிலாளி தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சல்! அறிகுறிகள், சிகிச்சை முறை என்ன? தமிழகத்தில் ஆபத்து ஏற்படுமா
மிரட்டி பலாத்காரம்
அதாவது கடந்த 2015 முதல் மகள் என்று கூட பாராமல் அந்த தொழிலாளி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. தனது மனைவி வீட்டில் இல்லாதபோது மகளை மிரட்டி அவர் வன்புணர்வு செய்துள்ளார். மேலும் சம்பவம் குறித்து வெளியில் கூறக்கூடாது. இதுபற்றி வெளியே தெரிவித்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். மேலும் இருவரையும் போலீசார் கைது செய்வார்கள் என ஏமாற்றியுள்ளார்.
கர்ப்பம்
இதனால் பயந்துபோன சிறுமி தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து வெளியே யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட தொழிலாளி, தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி 2017 ல் கர்ப்பமானார். இதுபற்றி அறிந்து அவரது தாய் அதிர்ச்சி அடைந்தார். சம்பவம் குறித்து விசாரித்தபோது அவர் வாய் திறந்து பதில் பேசவில்லை.
தந்தை கைது
இதையடுத்து சிறுமியை குழந்தைகள் நலத்துறை கமிட்டியினர் அழைத்து விசாரித்தனர். மேலும் அவருக்கு கவுன்சிலிங் கொடுத்தனர். அப்போது தான் தந்தையே அவரை மிரட்டி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது பற்றி அழுதபடி கூறினார் இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் போக்சோ உள்பட பல்வேறு சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ரப்பர் தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
106 ஆண்டு சிறை
இதுதொடர்பான வழக்கு கேரள மாநிலம் நெயட்டின்காரவில் உள்ள சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை முடிடைந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி உதயகுமார் தீர்ப்பு வழங்கினார். அதில் மகளை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய ரப்பர் தொழிலாளிக்கு போக்சோ உள்பட பல்வேறு பிரவுகளின் கீழ் தனித்தனியே தண்டனைகள் அறிவிக்கப்பட்டன. இதில் மொத்தம் 106 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு, ரூ.17 லட்சம் அபராதமும் செலுத்த உத்தரவிடப்பட்டது. இருப்பினும் ஏக காலத்தில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியதால் தொழிலாளி 25 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.