அப்போ ராகுல் அலுவலகம்.. இப்போ சிபிஎம் ஆபிஸ்.. தொடரும் பெட்ரோல் குண்டு தாக்குதலால் கேரளாவில் பதற்றம்!
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள ராகுல் காந்தி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், நேற்றிரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்று நாடாளுமன்ற உறுப்பினரானார். இதனைத்தொடர்ந்து கடந்த வாரத்தில் வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்திற்குள் நுழைந்த சிலர் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் ராகுல் காந்தியின் அலுவலகம் சூறையாடப்பட்டது.
இதற்கு கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எஃப்ஐ மீது காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக சிசிடிவி காட்சி வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதேபோல், கேரள அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டது.
இந்தநிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு 11 மணியளவில் மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து இந்த அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளார்.
இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்படவில்லை. கட்சி அலுவலகத்தில் குண்டு வீசியதை அடுத்து சிபிஎம் கட்சியின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு எதிர்ப்பு! டீஸ்டா செதல்வாட்டை விடுவிக்ககோரி களமிறங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
கேரள மாநிலத்தை ஆட்சி செய்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சி அலுவலகத்தில் வெடிகுண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பெட்ரோல் குண்டு எரியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
அதனை அடிப்படையாக கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியினரே காரணம் என்று சிபிஎம் கட்சி தொண்டர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று சிபிஎம் மூத்த நிர்வாகிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கேரள மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவரது வருகையையொட்டி சிபிஎம் அலுவலகம் தாக்கப்பட்டது, கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.