“ரெட் அலர்ட்” - வெள்ளத்தில் மூழ்கிய கேரளா! சபரிமலை பக்தர்களுக்கு அவசர எச்சரிக்கை
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சபரி மலைக்கு வரும் பக்தர்களின் வருகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது கேரளாவில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்நிலையில் பத்தினம்திட்டா மாவட்டத்திற்கு மிக அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வருகையை தவிர்க்க வேண்டும் என்றும், அதேபோல மீதமுள்ள பக்தர்களை வெளியேற்றவும் கோயில் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.
யானையாலே முடியல.. சுற்றி சூழ்ந்த வெள்ளம்.. தப்பியதா, இல்லையா.. கேரள திக் திக் காட்சிகள்!
நிறபுதாரி பூஜை
கேரள மாநிலத்தில் உள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 914 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் புனித பயணம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் இக்கோயிலில் இன்று நிறபுதாரி பூஜை நடைபெறுகிறது. இதனால் காலை முதலே பக்தர்கள் பலர் தங்கள் பயணத்தை தொடங்கி இருந்தனர். ஆனால் மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் பக்தர்கள் தரிசனம் செய்வதில் தொடர்ந்து இடையூறுகள் ஏற்பட்டன. இந்நிலையில், தற்போது மாவட்டம் முழுவதும் அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வெள்ளப் பெருக்கு
கோயில் அமைந்துள்ள பகுதிக்கு செல்வதற்கு முன்னர் பம்பை நதியை கடக்க வேண்டும். ஆனால் தொடர் மழை காரணமாக பம்பையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பிற்பகல் 3 மணிக்கு மேல் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கமாட்டாது என ஏற்கெனவே மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கன மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து தற்போது, சன்னிதானத்திலிருந்து பக்தர்கள் வெளியேற வேண்டும் என்று நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. வெளியேறும் பக்தர்களை பத்திரமாக அழைத்து வரவும் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ளவும் பேரிடர் மீட்புப்படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
ஆலோசனை
முன்னதாக இந்த நிகழ்வு தொடர்பாக கோயில் நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் திவ்யா ஐயர் ஆலோசனை நடத்தினார். அதில் திட்டமிட்டபடி கோயில் திருவிழா நடைபெறும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அத்துடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பம்பை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பக்தர்களுக்கு அங்கு புனித நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தக் கூடத்தில் கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மேலும் இந்த திருவிழாவிற்கு பக்தர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் பத்தனாம்திட்டா முதல் எருமேலி வரையிலான சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டது. கேரள போக்குவரத்து கழகம் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகளும் விடப்பட்டிருந்தன.
உயிரிழப்பு
நேற்றைய நிலவரப்படி கனமழைக்கு 18 பேர் வரை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சாலைகள் பல அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 1000-க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் 178 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு பணியில் உள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர்.