பர்தா அணிந்த உருவம்.. ஆண்போல் நடை! கேரள மக்களுக்கு வந்த சந்தேகம் - சங்கி மங்கிபோல் சிக்கிய சாமியார்
திருவனந்தபுரம்: கேரளாவில் பர்தா அணிந்து நடந்து சென்ற கோயில் பூசாரியை பொதுமக்களே பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகர் விஜய் நடித்த போக்கிரி படத்தில் சங்கி மங்கி என்ற நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகர் வடிவேலு. அதில் அசினை வேவு பார்க்க பல்வேறு வேடங்களில் செல்லும் வடிவேலு பர்தா அணிந்த வேடத்திலும் செல்வார்.
பர்தா அணிந்து முகம் வரை மறைத்திருக்கும் வடிவேலு மண்டை மேல் இருக்கும் கொண்டையை மறைக்க மறந்திருப்பார். அதை வைத்து விஜய்யின் நண்பர்கள் அவரை கண்டுபிடித்து தாக்குவார்கள். அப்போது வரும் மண்டை மேல் உள்ள கொண்டையை மறந்துட்டேனே என்ற வசனம் இன்று வரை பேமசாக இருக்கிறது.

கேரள சம்பவம்
இதேபோன்ற உண்மை சம்பவம்தான் தற்போது கேரளாவில் அரங்கேறி இருக்கிறது. கோழிக்கோடு மாவட்டம் கோயிலாண்டி பகுதியில் புர்கா என்று சொல்லப்படும் தலைமுதல் கால் வரை கருப்பு துணியால் மறைக்கப்பட்டு இருக்கும் உடையை அணிந்தபடி ஒருவர் நடந்து சென்று இருக்கிறார்.

மக்கள் சந்தேகம்
ஆனால், அவரது நடையும் பாவனையும் ஆண்போல் இருந்ததை கண்டு அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்களும், பொதுமக்களும் சந்தேகம் அடைந்து இருக்கின்றனர். உடனே புர்கா அணிந்து சென்றவரை தடுத்து நிறுத்தி முகத்தை காட்டுமாறு அவர்கள் கூறியுள்ளனர். அப்போது அது பெண் அல்ல, ஆண் என்பது தெரியவந்திருக்கிறது.

கோயில் பூசாரி
அதிர்ச்சியடைந்த அவர்கள் அந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் ஜிஷ்னு நம்பூதிரி (வயது 28) என்றும், மேப்பயூர் அருகே உள்ள கோயில் ஒன்றில் பூசாரியாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. அம்மை நோயால் பாதிக்கப்பட்டதன் காரணமாக பர்தா அணிந்து வெளியில் வந்ததாக அவர் விளக்கமளித்து உள்ளார்.

அம்மை நோயா?
ஆனால், பூசார் ஜிஷ்னு நம்பூதிரி அம்மை நோயால் பாதிக்கப்பட்டதற்கான எந்த விதமான அறிகுறியும் தென்படவில்லை என போலீசார் தெரிவித்து இருக்கின்றனர். இருப்பினும் அவர் இதற்கு முன் எந்தவிதமான குற்றச் செயல்களிலும் ஈடுபட்டதில்லை என்பதால் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications