நூற்றாண்டு விழா காணும் மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்
இதுகுறித்து மதுரை தமிழ்ச்சங்க தலைவர் குமரன்சேதுபதி, செயலாளர் அழகுமலை, செந்தமிழ்க் கல்லூரி செயலாளர் குருசாமி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் முதல், இடை, கடை என 3 தமிழ் சங்கங்கள் அழிந்த பின்னர், மதுரையில் நான்காவது தமிழ்ச் சங்கம் தோன்றியது.
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் முகவை மன்னர் மரபில் வந்த பாண்டித்துரை தேவர் இதனை தொடங்கினார்.
தமிழ் மீதுள்ள பற்றால், பழந்தமிழ் நூல்களையும், ஓலைச் சுவடிகளையும் பதிப்பித்து நூல்களாக வெளியிடும் வகையில் இச்சங்கத்தைத் தொடங்கினார். 4ம் தமிழ் சங்கம் சார்பில் 70க்கும் மேற்பட்ட நூல்கள் இதுவரை வெளியிடப் பட்டுள்ளன.
இச்சங்கம் 1901ம் ஆண்டில் தொடங்கப்பட்டாலும் கூட, முறைப்படி 1908ம் ஆண்டுதான் பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் நூற்றாண்டு விழா வரும் 20, 21ம் தேதிகளில் நடைபெறவுள்ளன.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் நடைபெறும் விழாவில் தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், ஆதினங்கள், நீதிபதி, உயர் கல்வித்துறை செயலாளர், துணைவேந்தர்கள் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
விழாவையொட்டி ராகவையங்கார் எழுதிய 'சேதுநாடும் தமிழும்' என்ற நூலின் 3வது பதிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தனர்.