'அறிவியல் கதைகள்' தந்தை ஆர்தர் கிளார்க் காலமானார்
கடந்த 1917ல் இங்கிலாந்தில் பிறந்த ஆர்தர் சி கிளார்க் 50 ஆண்டுகளுக்கு முன்பாக இலங்கையில் குடியேறினார். தலைநகர் கொழும்புவில் வசி்த்துவந்த கிளார்க் இதுவரை 80க்கும் மேற்பட்ட அறிவியல் புனைகதைகளை எழுதியுள்ளார். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு கிளார்க் ஆற்றிய பணிக்காக ஏராளமான விருதுகளை வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இவரது கதைகளில் இடம்பெற்ற கற்பனையான விஞ்ஞான தொழில்நுட்பங்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையிலேயே நடைமுறைக்கு வந்தபோது பலரும் ஆச்சரியமடைந்தனர்.
தகவல் தொடர்புக்காக விண்ணில் பூமியைச் சுற்றிவரும் சாட்டிலைட்டுகளை செலுத்தமுடியும் என்பது, இந்த தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்படுவதற்கு முன்பே கிளார்க் தனது கதைகளில் கூறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வணிகரீதியில் விண்வெளியில் போக்குவரத்து நடப்பது நிச்சயம் ஒருநாளைக்கு சாத்தியமாகும் என்று தீர்க்கதரிசியாக தனது கதையில் குறிப்பிட்டவர் கிளார்க்.
தனது 90வது பிறந்தநாளை கடந்த டிசம்பர் 16ம் தேதி கொண்டாடியபோது, இலங்கையில் நீண்டநாள்களாக நடந்துவரும் இனப்பிரச்னை முற்றுப்பெற்று அங்கு விரைவில் அமைதி ஏற்படுவதே தனது விருப்பம் என்று கூறியிருந்தார்.
கடந்த சில நாள்களாக உடல் நலம் குன்றிய நிலையில் கொழும்புவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.
கிளார்க்கின் மறைவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே தனது ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.