சங்க இலக்கியங்கள் கால கண்ணாடி-துரைமுருகன்
வேலூர்: தமிழ் சமுதாயத்தின் கால கண்ணாடியாக விளங்கும் சங்க இலக்கியங்களை எளிமைப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் வேலூர் ஊரீசு கல்லூரியின் தமிழ்த்துறை ஆகியவை இணைந்து சங்க இலக்கியம்: பத்துப்பாட்டு பயிலரங்கத்தை நடத்துகின்றன.
வரும் 22ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இந்த பயிலரங்கில் வேலூர் மாவட்டக் கல்லூரிகளில் இருந்து தமிழ் எம்ஏ, எம்பில் பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
கல்லூரி முதல்வர் டேனியல் எழிலரசு தலைமை தாங்க தமிழ்த்துறை தலைவர் செல்லையா வரவேற்றார்.
பொதுப்பணித்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பயிற்சி மாணவர்களுக்கு சங்க நூல்களை வழங்கிப் பேசினார். அவர் கூறியதாவது:
நமது முன்னோர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள், செய்த சீர்திருத்தங்கள் நாம் இன்று எழுதும் தமிழுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. உலகத்தில் வேறு எந்த மொழிகளோடும் இணையாத ஒரே மொழி தமிழ் மொழிதான்.
நமது நாட்டின் கல்வி, சுகாதாரத்துக்கு கிருஸ்தவ மதம் நிறைய தொண்டுகளை செய்திருக்கிறது. இதை நாம் நினைத்து பார்க்க வேண்டும். கிருஸ்தவர்கள், தமிழ் மொழியை கற்று அதனை உணர்ந்திருந்ததால், தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தனர்.
உலகில் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக தாக்கு பிடித்து வருவது தமிழ் இலக்கியம் தான்.
சங்க இலக்கியம், தமிழ் சமுதாயத்தின் கால கண்ணாடி. சங்க இலக்கியங்கள் வாயிலாக தான், நம்முடைய வரலாறு, நாம் யார், நமக்கு முன் இருந்த மன்னர்கள், நிலம், கடவுள், நாகரீகம், பழக்கவழக்கங்கள் பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. அத்தகைய சங்க இலக்கியங்களை எழுமைப்படுத்தி, தமிழ் மொழி எல்லா மக்களையும் போய் சேரும் வகையில் செய்ய வேண்டும் என்றார்.
விழாவில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன ஊரீசு கல்லூரி பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் சிவமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications