மெட்ராஸ் டூ சென்னை - வயசு 370!
சிறிய குக்கிராமமாக இருந்து இன்று இந்தியாவின் பெருநகரங்களில் ஒன்றாக விஸ்வரூபம் எடுத்து நிற்கும் சென்னைக்கு வயது 370 ஆகிறது.
ஒருபக்கம் ஐடி துறையின் வளர்ச்சி, உலகப் புகழ்பெற்ற ஆட்டோமொபைல் பிரிவுகளின் சங்கமம், உலகப் புகழ்பெற்ற மருத்துவ வசதிகள் என நவீன சென்னையாக திகழ்ந்து வரும் முன்னாள் மெட்ராஸ், தென்னகத்தின் கலாச்சாரத் தலைநகராகவும், தனது பழமை மற்றும் பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்காமல், இந்த 370 வயதிலும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது.
மெட்ராஸ் உதயமானதன் 370வது நாளை கொண்டாடும் வகையில் மெட்ராஸ் டே என்ற பெயரில் ஒரு வார கால நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு கலாச்சார, இலக்கிய நிகழ்ச்சிகள் இதில் இடம் பெறுகின்றன.
ஹெரிட்டேஜ் வாக், பள்ளி கல்வி பரிமாற்றத் திட்டங்கள், உரையாடல்கள், போட்டிகள், கவியரங்கங்கள், புகைப்படக் கண்காட்சிகள், பைக் டூர் என பல்வேறு நிகழ்ச்சிகள் சென்னை முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று உள்ள சென்னை மக்களுக்கு அன்றைய மெட்ராஸை நினைவுபடுத்தும் வகையிலான பழமையான புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னப்பக்க நாயக்கர் என்பவர் வசம் இருந்த சில பகுதிகளை 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி வெள்ளைக்கார அரசின் நிர்வாகியான பிரான்சிஸ் டே என்பவர் விலை கொடுத்து வாங்கினார். இந்த நாள்தான் சென்னை நகரின் பிறப்பு நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
சென்னை துறைமுகத்திற்கு அருகே வாங்கப்பட்ட அந்த இடத்தில் புதிய குடியிருப்புகளை நிர்மானித்தார் பிரான்சிஸ் டே. அது மதராஸ்பட்டணமாக மலர்ந்து பின்னர் மெட்ராஸ் ஆகி இப்போது சென்னையாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.












Click it and Unblock the Notifications