சபரி்மலையில் வரலாறு காணாத கூட்டம் : பக்தர்கள் 14 மணி நேரம் காத்திருப்பு
திருவனந்தபுரம்: சபரிமலையில் கடந்த வெள்ளிக்கிழமை குவிந்த பக்தர்கள் கூட்டம் இன்னும் குறைந்தபாடில்லை. 14 மணி நேரம் காத்திருந்து ஐயப்பனை தரிசிக்கின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல கால பூஜையை முன்னிட்டு கடந்த மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்த முறை வரலாறு காணாத வகையில் தினமும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தப்படி உள்ளது.
இதனால் பக்தர்களை போலீசார் பம்பையிலேயே நிறுத்தி சிறு சிறு குழுக்களாக சன்னிதானத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். தரிசனம் செய்த பக்தர்களும், தரிசனம் செய்ய முடியாத பக்தர்களும் சன்னிதானத்திலேயே தங்குவதால் நெருக்கடி அதிகரித்து சன்னிதானத்தில் நிற்க கூட இடம் இல்லாத நிலை உருவாகி உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று ஏற்பட்ட நெரிசல் நேற்று வரை குறையவில்லை. இதனால் சன்னிதானத்தில் இருந்து சுலபமாக இறங்கி வருவதற்கு ஏற்ற வகையில் பக்தர்களை போலீசார் பம்பையில் இருந்து அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பம்பையில் இருந்து புறப்பட்ட பக்தர்கள் நேற்று காலை 6 மணிக்கு பிறகே ஐயப்பனை தரிசிக்க முடிந்தது.
நெரிசல் காரணமாக பல இடங்களில் பக்தர்கள் விழுந்து காயம் அடைந்தனர். பல இடங்களில் கயிறு மூலம் தடுப்பு ஏற்படுத்தி பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டனர். இதனால் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் அவதிப்பட்டனர்.