For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காரைக்கால் அம்மைக்கு முக்தி கொடுத்த இறைவன்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஆனி மாதம் வரும் பவுர்ணமி நாளில் ஆண்டுதோறும் காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா செவ்வாய்க்கிழமை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. புதன்கிழமை அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய அம்சமான சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி வியாழக்கிழமை அதாவது பவுர்ணமி தினத்தன்று நடைபெறுகிறது. அன்றைய தினம் காரைக்கால் நகர் முழுவதும் திரண்டுள்ள பக்தர்கள் கூடை கூடையாக இறைவன் மீது மாம்பழங்களை அள்ளி வீசி நேர்த்திக்கடன் செலுத்துவர்.

மாங்கனி திருவிழா வரலாறு

இறைவனால் புனிதவதி என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார். அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனி கோவில் உண்டு. பதிபக்தியும் சிவபக்தியும் கொண்டவர் புனிதவதியார். அவரது கணவர் பரமதத்தர் ஒருநாள் இரண்டு மாம்பழங்களை தனது கடை ஊழியரிடம் கொடுத்து அனுப்பினார். இதனை கண்ட சிவபெருமான் அம்மையாரின் பக்தியை சோதிக்க வேண்டி சிவனடியார் வேடம் பூண்டு வீட்டிற்கு வந்து பிச்சை கேட்கிறார்.

அம்மையாரும் மனமுவந்து மாங்கனியை உண்ண வைத்து விருந்து படைக்கிறார். சிவனடியார் சாப்பிட்டு விட்டு சென்ற பின்னர் பரமதத்தர் வீட்டிற்கு உணவு உண்ண வருகிறார். அப்போது மீதமிருந்த ஒரு மாம்பழத்தை வைத்து உணவு பரிமாறினார் புனிதவதி அம்மையார். .

இறைவன் அளித்த பழம்

பழத்தை சுவைத்த கணவர் அதன் சுவையில் மயங்கி மற்றுமொரு பழத்தை கொண்டுவருமாறு கேட்கவே, உண்மையை சொல்ல அஞ்சிய அம்மையார் இறைவனை வேண்டவே அம்மையின் கையில் மாம்பழம் வந்து விழுகிறது.

உடனே அந்த பழத்தை கொய்து கணவருக்கு படைக்கிறார் அம்மையார். மாம்பழத்தின் சுவை அதிகமாக இருக்கவே ஏது இப்பழம் என்று வினவினார் பரமதத்தர். அம்மையாரும் இனிமேல் பொய் கூற முடியாது என்று நினைத்து உண்மையை கூறிவிடுகிறார். அதை நம்பாத கணவர் என்முன்னால் பழம் வரவைக்க முடியுமா என்று கேட்கிறார்.

அம்மையாரும் இறைவனை வேண்டி நிற்கவே மாம்பழம் கையில் வந்து விழுகிறது. இனிமேல் அம்மையாருடன் குடும்பம் நடத்த முடியாது என்று அஞ்சிய பரமதத்தர் கடல் கடந்து வாணிபம் செய்ய கப்பலேறி செல்கிறார். பின் மதுரையில் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைக்குப் புனிதவதி என்று பெயரிடுகிறார்.

அம்மையாருக்கு முக்தி அளித்த சிவன்

கணவர் மதுரையில் இருப்பதை அறிந்த அம்மையார், புஷ்ப பல்லக்கில் அவ்வூருக்குச் செல்கிறார். அம்மையார் வருவதை அறிந்த கணவர், தம் மனைவி, குழந்தையுடன் வந்து அவர் காலில் விழுகிறார். கணவனே காலில் விழுந்து வணங்கிய பிறகு இல்லற வாழ்வில் இனி ஈடுபடுதல் கூடாது என்ற எண்ணத்தில் சிவனிடம் வேண்டி தம் அழகுத் திருமேனியை உதிர்த்து பேயுருவம் கொண்டு கைலாயம் செல்கிறார். அப்பொழுது சிவபெருமான் எழுந்தருளி அம்மையாருக்கு முக்தியளிக்கிறார்.

இறைவன் பிச்சாடனார் வேடமிட்டு ஊர்வலம் போகும் போது தெருவில் கூடியிருக்கும் பக்தர்கள் ஆயிரக்கணக்கான மாம்பழங்களை கூடை கூடையாக கொட்டி இறைவனுக்கு காணிக்கையாக்குவது விழாவின் சிறப்பம்சமாகும்.

அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் மூன்று நாட்களும் காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறுகிறது.

English summary
The four-day annual Mangani’ (mango) festival of the Karaikal Ammaiyar temple here begins on Tuesday with Vinayaka pooja. The Mangani’ festival is celebrated on the Pournami day (full moon day) in the Tamil month of Aani’ (June-July) at the Karaikal Ammaiyar temple in Karaikal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X