சித்திரை மாத பிறப்பு-உலகெங்கும் தமிழர்கள் உற்சாகக் கொண்டாட்டம்
சென்னை: கர ஆண்டின் முதல் மாதமான சித்திரை இன்று பிறந்தது. இதை தமிழர்கள் உலகெங்கும் இன்று உற்சாகமாகக் கொண்டாடினர்.
சித்திரை மாதப் பிறப்பை தமிழ் வருடப் பிறப்பாக தமிழர்கள் கொண்டாடி வந்தனர். இருப்பினும் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகையுடன் சேர்த்து கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
இருப்பினும் சித்திரை முதல் நாளையும் தமிழர்கள் உற்சாகத்துடன் சித்திரை விழாவாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் கர ஆண்டின் பிறப்பாகிய இன்று தமிழர்கள் வழக்கம் போல கொண்டாடி வருகின்றனர்.
கோவில்களுக்குச் சென்று வழிபட்டும், உற்றார் உறவினர்களை சந்தித்தும், சித்திரைப் பிறப்பை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆண்டின் முதல் நாள் என்பதால் கோவில்களில் கூட்டம் அலைமோதுகிறது. சிறப்பு அர்ச்சனைகளும், பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.