நட்பு என்னும் நூலெடுத்து பூமியைக் கட்டி நீ நிறுத்து...!
சென்னை: ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறு நண்பர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டிற்கான நண்பர்கள் தினம் இன்று.
எந்தவித ரத்த பந்தமும் இல்லாமல், தன் நண்பனுக்காக உயிரைக் கொடுக்கும் அளவிற்கு பாசம் வைக்கும் நட்பிற்கு எப்போதுமே தனி மதிப்பு தான்.
நட்பிற்கு ஆண், பெண் என்ற வித்தியாசம் கிடையாது. வயது வித்தியாசமும் கிடையாது.
நட்பு...
இந்த உலகமே நட்பு என்னும் நூலில் தான் கட்டப்பட்டுள்ளது எனலாம். பெற்றோரிடம், கணவர், மனைவியிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாத சில விசயங்களை நண்பர்களிடம், தோழிகளிடம் கொட்டித் தீர்க்கலாம்.
சுயநலம் இல்லாதது...
எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, சுயநலம் இன்றி உண்மையான பாசத்தை அள்ளித் தருவதில் நட்புக்கு வேறு உறவுகள் நிகரில்லை எனலாம். அப்படியான நட்பை தனி அதிகாரம் போட்டு திருவள்ளுவரும் கொண்டாடியுள்ளார்.
பேதமே கிடையாது...
உறவினர்கள் இல்லாமல் இருப்பவர்களைக்கூட பார்க்க முடியும். ஆனால் நண்பர்கள் இல்லாதவர்களைக் கண்டுபிடிப்பது கடினம். பொருளாதாரம், ஏற்றத்தாழ்வு, வயது, ஆண் பெண் பேதம் என எதுவும் நட்பிற்கு கிடையாது.
ஞாபகங்கள் தாலாட்டும்...
காலத்தின் ஓட்டத்தில் புதிய புதிய நண்பர்கள் கிடைத்தாலும், பழைய ஆருயிர் நண்பர்கள் எப்பவுமே ஸ்பெஷல் தான். அப்படிப்பட்டவர்களையும், அந்த வசந்தகாலங்களையும் நெஞ்சில் அசைபோட இந்த நண்பர்கள் தினம் உதவுகிறது என்றால் மிகையில்லை.