அம்மா கடலம்மா.. இனி உலகம் நீயம்மா.. உலக கடல் தினம் இன்று!
உலக கடல் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
Recommended Video
சென்னை: கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில் எழுதினான், "இந்தக் கடல் மாபெரும் திருடன்...!" கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வலையில் சிக்கின. அவர் அக்கடற்கரையில் எழுதினார், "இக்கடல் பெரும் கொடையாளியப்பா...!"
அதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று மூழ்கிவிட்டான். மகன் மீது அதிக பிரியமுடன் இருந்த அவன் தாய் அக்கடற்கரையில் எழுதினாள், "இக்கடல் மக்களை கொன்று குவிக்கின்றதே...!" ஓர் வயது முதிர்ந்த மனிதர் கடலுக்குச் சென்று முத்துக்களை வேட்டையாடிக்கொண்டு வந்தார். அவர் மிக்க மகிழ்ச்சியோடு அக்கடற்கரையில் எழுதினார், "இந்தக் கடல் ஒன்றே போதும். நான் ஆயுள் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்கலாம்...!"
பலமாக பதிலடி கொடு
ஓர் பெரும் அலை வந்து இவர்கள் அனைவரும் எழுதியவற்றை அழித்துவிட்டுச்சென்றது. பிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாதே. இவ்வுலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கின்றனர். உன் நட்பும், சகோதரத்துவமும் நிலைக்க வேண்டுமானால் நீ பிறரின் தவறுகளை உன் மனதிலிருந்து அழித்துவிடு. தவறுக்காக உன் நட்பையோ, சகோதரத்துவத்தையோ அழித்துவிடாதே. நீ ஓர் கெடுதியை சந்திக்க நேர்ந்தால் அதை விடவும் பலமாக அதற்கு பதிலடி கொடுக்க வேண்டுமென ஒரு போதும் எண்ணாதே... என்பதே இதன் கருத்து. ஆம்... இன்று உலக கடல் தினம்.
கண்ணை உறுத்திய கடல்
பார்க்க பார்க்க சலிக்காதது கடல்... வியப்புகளை கூட்டி கொண்டே செல்வது கடல்... ஆரம்ப காலகட்டத்தில் படகுகளை கடலில் மிதக்கவிட்டு அந்த விடியலின் மகிழ்ச்சியில் திளைத்து வந்தனர் நம் மக்கள். ஆனால் 1990-களில் கடல்களிலுள்ள ஏராளமான வளங்கள் ஏகாதிபத்திய நாடுகளின் பன்னாட்டு முதலைகளின் கண்ணை உறுத்தியது... முன்பின் பார்த்திராத அந்நாடுகளின் பிரமாண்டமான கப்பல்களை கண்டதும் வெகுஜன மக்கள் மிரண்டனர். பிரமாண்ட கப்பல்களை விட்டு மிரட்டி.. கடல் வளங்களை சூறையாடினர். ஆனால் உலகின் பலதரப்பட்ட நாடுகளிலிருந்து வந்த கண்டன குரல்கள் ஒங்கி ஒலித்தன. கபொதுசொத்து என கருத்து முன்வைக்கப்பட்டு 1992-ஜூன் 8 முதல் புவி மாநாட்டில் உலக கடல் நாள் கொண்டாட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்து. ஆனால் 2009-ஜூன் 8-லிருந்துதான் உலக கடல் தினம் கொண்டாட ஐ.,நா. அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பூமியின் நுரையீரல்
கண்டங்களை ஒருங்கிணைப்பது மட்டும் கடல் அல்ல. கண்டங்களுக்குள் போக்குவரத்தை பல ரூபங்களில் நடமாடவிட்டு, பல்லாயிரக்கணக்கான மனிதன் உட்பட ஜீவராசிகளின் உணவு தேவைகளின் பூர்த்தி செய்து உதவி கொண்டிருக்கிறது கடல். கடலை நம்பியுள்ள லட்சக்கணக்கானோருக்கு வாழ்வாதாரங்களை அள்ள அள்ள குறையாமல் அளித்து வருகிறது. பல்லுயிர்களை பெருக்கெடுத்து கொடுக்கும் இயற்கை அன்னையாக விளங்கி கொண்டிருக்கிறது கடல். பெருமளவு மருந்துகள், உணவுகளை வாரி வழங்கி வருகிறது. முக்கியமாக நமக்கு மரங்களிலிருந்து கிடைப்பதைவிட கடலிலிருந்து கிடைக்கும் பிராண வாயுவே அதிகம். ஆம்.. கடல்... பூமியின் நுரையீரல்!!
களையிழக்கிறாள் கடலன்னை
ஆனால் கடல் அன்னை சமீப வருடங்களாக பொலிவிழந்து வருகிறாள். களையிழந்து காணப்படுகிறாள். பெட்ரோலியம், உரம், சாயம், தோல், தொழிற்சாலைகளின் கழிவுநீர் மாசு... எண்ணெய் கசிந்து கடலன்னை மாசு படிந்து வருகிறாள். அளவுக்கதிகமான மீன்கள் பிடிக்கப்படுவதாலும், ஓயாமல் நிகழும் கப்பல் போக்குவரத்தாலும், பிளாஸ்டிக் பொருட்களை வீசியெறிவதாலும் கடலின் சுத்தம் பறிபோய் கொண்டிருக்கிறது.
சந்ததிகளுக்கு பரிசு
எண்ணற்ற உயிர்கள் கடலுக்குள்ளேயே மடிந்து வீழ்ந்து வருகின்றன. கடலை மாசுபடுத்தும் உலக நாடுகளில் இந்தியா 12-வது இடத்தில் உள்ளதாம். மீன்களின் எண்ணிக்கை வேறு சரசரவென குறைந்து வருகிறதாம். வரும் வருடங்களில் மீன் இனமே குறையும் வாய்ப்பும் உள்ளதாம். நிலவாழ் உயிரினங்கள் தென்படும் அளவிற்கு கடல் வாழ் உயிரினங்களின் மதிப்பும், பரந்து விரிந்த கடலின் பெருமையையும் நாம் உணர்வதே இல்லை என்பது வேதனை. இனியாவது, கடல் மாசுபடாமல் காத்து அடுத்த சந்ததிகளுக்கு தூய்மையான கடல் அன்னையை பரிசாக அளித்துவிட்டு செல்வோமே. எங்கு ஆரம்பித்து எங்கு முடிகிறது என்றே தெரியாமல் யுகம் யுகமாய் புதிராய் விளங்கிவரும் இந்த பிரம்மாண்டத்தின் பெருமையையும் சொல்லிவிட்டு செல்வோமே...