கோல்ட் - சினிமா விமர்சனம்
நடிகர்கள்: பிருத்விராஜ், நயன்தாரா, செபின் பென்சன், தீப்தி சதி, ரோஷன் மேத்யூ, சைஜு க்ரூப்; இசை: ராஜேஷ் முருகேசன்; இயக்கம்: அல்போன்ஸ் புத்திரன்.
2013இல் நிவின் பாலி, நஸ்ரியா, பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான நேரம் படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், 2015இல் பிரேமம் படத்தை இயக்கி பெரும் கவனத்தைப் பெற்றார்.
இப்போது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு Gold திரைப்படத்தின் மூலம் கொடுத்திருக்கிறார்.
இந்தப் படத்தின் கதை இதுதான்: ஜோஷி (பிரித்விராஜ்) ஒரு மொபைல் போன் கடை வைத்திருக்கிறார். ஒரு நாள் காலையில் யாரோ ஒருவர் அவர் வீட்டு வாசலில் பொலேரோ சரக்கு வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்று விடுகின்றனர்.
அந்த லாரி முழுக்க ப்ளூ டூத் ஸ்பீக்கர்கள் இருக்கின்றன. காவல்துறையிடம் புகார் அளிக்கும் ஜோஷி, லாரியில் இருக்கும் ஸ்பீக்கர்களில் ஒன்றை எடுத்து பயன்படுத்த முயல்கிறார். ஆனால், அந்த ஸ்பீக்கரில் தங்கம் இருக்கிறது.
இதுபோல இருநூறு தங்கக் கட்டிகள் அந்த வாகனத்தில் இருக்கின்றன.அதை யாருக்கும் தெரியாமல் எடுத்துக்கொள்ள நினைக்கிறார் ஜோஷி.
இதற்கிடையில், நகைக்கடை உரிமையாளரான உன்னிகிருஷ்ணன் (ஷம்மி திலகன்) தனது மகள் சுமங்கலிக்கு (நயன்தாரா) திருமணம் நிச்சயம் செய்கிறார். உன்னிகிருஷ்ணனுக்கும் ஸ்பீக்கருக்குள் உள்ள தங்கத்திற்கும் என்ன தொடர்பு? அந்த வண்டியை அங்கே நிறுத்தியது யார்? ஜோஷியால் தங்கத்தை எடுக்க முடிந்ததா? இதுதான் படத்தின் மீதிக் கதை.
இந்தப் படத்திற்கு தற்போது ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகிவருகின்றன.
"இதிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்"
இந்து தமிழ்திசை நாளிதழின் இணைய பக்கத்தில் வெளியாகியுள்ள விமர்சனத்தில், 'எந்தவித கதையையும், அதையொட்டி நீளும் உணர்ச்சித் தாக்கங்களையும் எதிர்பார்க்காமல், தொழில்நுட்ப ரீதியான ரசனையை மட்டும் நம்பி செல்பவர்களுக்கு இந்த 'கோல்டு’ 24 கேரட் தான். அழுத்தமான, அடர்த்தியான கதையையும், திரைக்கதையையும் எதிர்பார்த்துச் சென்றால் கோல்டு ஜொலிக்க வாய்ப்பு குறைவு" என்று குறிப்பிட்டிருக்கிறது.
அல்போன்ஸ் புத்திரன் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் Gold ஒரு நல்ல கொள்ளை - காமெடி - த்ரில்லராக உருவாகியிருக்கும் என கலவையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது இந்தியா டுடே இணைய தளம்.
Times of Indiaவின் இணையதளமும் Gold குறித்து எதிர்மறையான விமர்சனங்களையே முன்வைத்துள்ளது. "இந்தப் படத்தை 165 நிமிடங்களுக்கு உட்கார்ந்து பார்க்கும் ரசிகர்களைப் போலவே இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனும் குழம்பிப்போயிருப்பதைப்போலத் தெரிகிறது" என்று குறிப்பிடுகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.
"பொதுவாக மலையாள படங்கள் பயணச் சீட்டுக்கு பின்புறம் எழுதும் அளவிலான கதையை வைத்துக்கொண்டு, திரைக்கதையில் மிரட்டி அழுத்தம் கூட்டுவது வழக்கம்.
"தேவைக்கு அதிகமான கதாபாத்திரங்கள்"
அப்படி தொடங்கும் இப்படத்தின் திரைக்கதையும் ஓரிடத்தில் அழுத்ததை கூட்டும் என எதிர்பார்த்தபோது, 'தேமே’வென வெறும் நகைச்சுவைகளால் நகர்வது ஒரு கட்டத்திற்கு மேல் அயற்சி. பார்வையாளர்களை கதைக்குள் இழுப்பதற்கான அழுகை, கோபம், விறுவிறுப்பு, பதற்றம், பயம் என்ற எந்த உணர்ச்சியும் திரைக்கதையில் இல்லாதது அதன் தொடர் ஓட்டத்தை பாதிக்கிறது.
மையக்கதை எனும் அச்சாணி பலவீனமாக காட்சியளிப்பதால் அதன் திரைக்கதை எனும் சக்கரம் பாதை தெரியாமல் தடுமாறியிருக்கிறது. அத்துடன் படத்தின் நீளமும் இணைய, இறுதியில் கேமரா, எடிட்டிங்காலும் ஈடுக்கட்ட முடியவில்லை.
படம் முடிந்த பின்பும் நிறைய கேள்விகளும் முழுமையற்ற உணர்வும் துரத்திக் கொண்டே இருக்கின்றன.
அதேபோல அடர்த்தியில்லாத கதையில் தேவைக்கு அதிகமான கதாபாத்திரங்கள் திகட்டல்" என இந்தப் படம் குறித்து விமர்சித்துள்ளது இந்து தமிழ் திசை.
மேலும் நகைச்சுவைக் காட்சிகளில் தன்னை தகவமைத்துக்கொள்ளும் கலைஞனாக கச்சிதமாக பொருந்துகிறார் பிரித்விராஜ். சுமங்கலி உன்னிகிருஷ்ணனாக நடித்திருக்கும் நயன்தாரா பெரிய அளவில் முக்கியத்துவமில்லாத கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் வந்து செல்கிறார் என்றும் இந்த இணைய தளத்தின் விமர்சனம் கூறுகிறது.
ரசிகர்கள் அல்போன்ஸ் புத்திரனிடம் எதிர்பார்த்த ஒரு Come-back திரைப்படம் இதுவல்ல என்கிறது இந்தியா டுடே.
"இரண்டு படங்களையே இயக்கியிருக்கும் அல்போன்ஸ் புத்திரன் தனக்கென ஒரு பெரிய ரசிக வட்டாரத்தை உருவாக்கிவைத்திருந்தார்.
இது அவருக்கு Come-back திரைப்படம் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு இயல்பாகவே அதிகமாக இருந்தது. ஆனால், அல்போன்சிடம் ரசிகர்கள் எதிர்பார்த்த Come - back திரைப்படமாக Gold அமையவில்லை.
இந்தப் படத்தில் ஒரு மெல்லிய கதையே இருக்கிறது. அதுவும் முக்கால்வாசி நேரத்திற்கு தேங்கி நிற்கிறது.
கதையில் என்ன பலவீனம்?
இந்தக் கதையை வைத்து சுவாரஸ்யமாகச் செய்திருக்கலாம். ஆனால், அல்போன்சின் தொடர்ச்சியில்லாத திரைக்கதை, நம்மை சுவாரஸ்யப்படுத்தவில்லை. உதாரணமாக, பிருத்விராஜ் எப்படி காவல்துறையினரை ஏமாற்றுகிறார் என்ற காட்சிகள் அரை மணி நேரத்திற்கு நீள்கின்றன" என விமர்சித்துள்ளது இந்தியா டுடே.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்று கூறி இந்தப் படத்தின் மீது விமர்சனங்களை வைத்திருக்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.
"சுவாரஸ்யமான சின்னக் கதையைக் கொண்டிருக்கும் இந்தப் படம் சில சமீபத்திய படத்தொகுப்பு முறைகளையும் நான் - லீனியர் கதை சொல்லும் முறையையும் முயன்று பார்த்திருக்கிறது.
துரதிருஷ்டவசமாக இது எதுவும் சரியாக வரவில்லை. இதே இயக்குநரின் முந்தைய படங்களில் உள்ள காட்சிகளைப் போல இவை அமைந்துவிட்டன.
அதிரவைக்கும் இசை, திடீர் தீடீர் 'கட்'கள், பூச்சிகள் வரும் காட்சிகள், இயற்கைக் காட்சிகள் போன்றவை இந்தப் படம் குறித்த மனநிலையை மேம்படுத்துவதற்குப் பதிலாக மிகவும் தொந்தரவு செய்கின்றன.
படத்தில் வரும் பெண்கள் எல்லோரும் மூளையில்லாதவர்களைப் போலக் காட்டப்படுகிறார்கள். ஜோஷியின் அம்மாவுக்கு நான்கு நாட்களாக தன் மகன் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்பதே தெரியவில்லை.
சுமங்கலியின் தாயோ தன் மகள் எந்த நேரமும் ஓடிப்போகலாம் என எதிர்பார்க்கிறார். பணக்காரத் தந்தையின் மகளான சுமங்கலியோ தனது துணையை இங்கி பிங்கி பாங்கி போட்டு தேர்வு செய்கிறார்" என்று விமர்சித்துள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்