ஏழ்மை- பத்மப்ரியா
பள்ளிவிட்டு ஓடிவந்ததும்
கட்டிக்கொண்டு முகம் புதைக்க
எப்போதும் வீட்டினில்
மெத்தென்று அம்மா
கடலை உருண்டை கைமுறுக்கு
எள்ளுருண்டை அப்பமென்று
வகைக்கொன்றாய் தின்று
வளர்ந்தாயிற்று
பதினெட்டு வரை
பசி அறியாமல்
பள்ளியில் தோழியருடன்
சண்டையென்றாலும்
வழியில் ரோமியோக்களின்
தொல்லை என்றாலும்
ஓடிவந்து சொல்ல
எப்போதும் வீட்டினில்
புன்னகையுடன் அம்மா
அம்மாவின் கதகதப்பும்
அவளது வாசனையும்
தந்த பாதுகாப்பை
எந்த ஆயுள் காப்பீட்டுக் கழகமும்
தரவில்லை எனக்கு
பசிக்கும்போது உணவளிப்பவள்
அம்மா எனில்
குளிர்பதனப்பெட்டி என்மகளுக்கு அம்மா
சொல்லித் தந்து வல்லவனாக்குதல்
தந்தைக்குக் கடமையெனில்
தொலைக்காட்சிப்பெட்டி அவளுக்கு அப்பா
பகிர்ந்து கொள்ளவும் பாதுகாப்பளிக்கவும்
எந்தப்பெட்டி உள்ளதெனச் சொன்னால்-
அந்தப்பெட்டியையும் வாங்குவேன் விரைந்து
என் மகளுக்காக
ஏன் எனில்
நான் வேலைக்குப் போகும் அம்மா அல்லவா?












Click it and Unblock the Notifications